நடுவானில் அமெரிக்க போர் விமானத்தை வழிமறித்து அச்சுறுத்திய சீன போர் விமானம்!!
வாஷிங்டன்: அமெரிக்க போர் விமானத்தை சர்வதேச வான்பரப்பில் சீனப் போர் விமானம் வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
தென் சீன கடல் உரிமை மற்றும் கிழக்கு சீன கடல் விவகாரங்களால் அப்பகுதி எப்போதும் பதற்றத்துடனேயே இருக்கிறது. மேலும் சீனாவுக்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது ராணுவத்தை அப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமையன்று சீனா கடற்பரப்பில் மேலாக சர்வதேச வான் எல்லையில் அமெரிக்க போர் விமானமான யு.எஸ் பி-8 ரக விமானம் சென்று கொண்டிருந்தது.
அப்போது, சீனாவின் போர் விமானமான சைனீஸ் ஜெ-11 அமெரிக்க போர் விமானத்திற்கு மிகவும் நெருக்கமாக 50 இல் இருந்து 100 அடி இடைவெளியில் 3 முறை வழிமறித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் மூத்த செய்தித் தொடர்பாளரான ஜான் கிர்பி, சீன போர் விமானமானத்தின் நடவடிக்கை இது தொடர்பாக சீன அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும். சீனாவின் போர் விமானத்தை இயக்கிய விமானி சர்வதேச சட்டங்களை மதிக்கவில்லை என்றார்.
மேலும் "இதுபோன்ற அச்சுறுத்தும் வகையிலான செயல்கள் சீனாவுடன் நாங்கள் வைத்துக் கொள்ள விரும்பும் ராணுவ தரப்பிலான உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.