சிங்கப்பூரில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்
தந்தை பெரியாரின் 139-ஆவது பிறந்தநாள் விழா சிங்கப்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூர்: தந்தை பெரியாரின் 139-வது பிறந்தநாள் விழாவை சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சிறப்பாக கொண்டாடியது.
பெரியாரின் சிந்தனைகளை ஏந்திய பதாகைகளை அரங்கில் வைத்து பெரியாரின் புகழ்போற்றும் பாடல்களோடு விழா தொடங்கியது. இந்த விழாவின் சிறப்பு அங்கமாக பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற பட்டிமன்றம் அரங்கேறியது.
"பெரியார் விரும்பியபடி பெண்கள் ஆண்களுக்கு சமமாக எல்லா வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள், உயரவில்லை"என்ற தலைப்பின்கீழ் எட்டு மாணவர்கள் சிறப்பாக பேசினார்கள்.
விழாவிற்கு சிறப்புவிருந்தினராக த. வேணுகோபால் ( உதவி இயக்குநர் தமிழ்த்துறை,கல்வி அமைச்சு,சிங்கப்பூர்) கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பல்வேறு சிங்கப்பூர் தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயலாளர் பூபாலன் விழாவை வழிநடத்தினார்,தலைவர் கலைச்செல்வன் தலைமை உரையாற்றினார்.
பெரியாரின் பிறந்தநாளில் அவரின் சிந்தனைகளை மாணவர்களிடம் எடுத்துச் சென்ற பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயல் போற்றத்தக்கது என்று அந்த அறிக்கையில் சிங்கப்பூரைச் சேர்ந்த தங்கமணி தெரிவித்துள்ளார்.