"டைட் ஷெட்யூலில்" காங்கிரஸ் இருப்பதால்... அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி பேச மாட்டார்!
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்குச் செல்லும்போது அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த மாட்டார். காரணம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் மோடி வரும்போது முக்கிய அலுவல்கள் இருப்பதால் மோடியை அழைக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக சபைத் தலைவர் கடிதம் மூலம் மோடிக்கு இதைத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார் மோடி. விசா தடைகள், இழுபறிகளால் மோடியை அலைக்கழித்து வந்த அமெரிக்கா தற்போது மோடி பிரதமரானதைத் தொடர்ந்து விழுந்தடித்துக் கொண்டு அவரை அமெரிக்காவுக்கு அழைத்துள்ளது.
இதையடுத்து அமெரிக்கா செல்கிறார் மோடி. அங்கு ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் வாஷிங்டன் செல்லும் அவர் அதிபர் பராக் ஒபாமாவையம் சந்தித்துப் பேசவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேச மாட்டார்
அதேசமயம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மோடி உரை இடம் பெறாது என்று தெரிய வந்துள்ளது.
பிரதிநிதிகள் சபைத் தலைவர் கடிதம்
இதுதொடர்பாக அமெரிக்க காங்கிரஸின் அதாவது நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவர் ஜான் போனர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இன்னொரு நாள் வாருங்கள்
அதில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை உங்களது பேச்சை கேட்க பெரும் ஆர்வமாக இருந்தது. இருப்பினும் காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் இன்னொரு நாளில் நீங்கள் வந்து பேசுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
டைட் ஷெட்யூல் காரணமாக
செப்டம்பர் மாதக் கடைசியில் பிரிதநிதிகள் சபையின் டைட் ஷெட்யூல் காரணமாக உங்களை அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலை இல்லாவிட்டால் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த உங்களை அழைத்து இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கும்.
மீண்டும் வரும்போது
உங்களது அமெரிக்க பயணம் முடிந்த பின்னர் நாடு திரும்பிய பின்னர் மீண்டும் ஒருமுறை கூட்டுக் கூட்டத்திற்காக உங்களை அழைக்கக் காத்த்திருக்கிறேன். இதுகுறித்து உங்களுடன் விவாதிக்க ஆர்வமாக உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
வாஜ்பாய் - மன்மோகன்
கடைசியாக வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர்தான் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய இந்திய பிரதமர்கள் ஆவர். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு கூட்டுக் கூட்டத்தில் பேச வாய்ப்பளிப்பது அமெரிக்காவில் கெளரவமாக கருதப்படுகிறது.
அழைப்பு விடுத்து எட்டு கடிதம்
முன்னதாக மோடியை நாடாளுமன்றக் கூட்டத்தில் பேச அழைப்பு விடுத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு கடிதங்களை அனுப்பியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
கூட்டத்தை மாற்றக் கோரிக்கை
இதற்கிடையே மோடி அமெரிக்கா வரும்போது அவர் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசுவதற்கு வசதியாக, நாடாளுமன்றத் தொடரை செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை நீட்டித்து நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 87 வயதான ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் பிராட் ஷெர்மன் கோரிக்கை விடுத்துள்ளார். மோடியைக் கெளரவிக்கும் வாய்ப்பை காங்கிரஸ் தவற விட்டு விடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.