இதுவரை இப்படி நடந்தது இல்லை.. தெற்கு சூடான் தலைவர்கள் காலில் விழுந்து முத்தமிட்ட போப் பிரான்சிஸ்
வாடிகன்: உள்நாட்டு போரை தடுக்க வலியுறுத்தி, தெற்கு சூடான் நாட்டு தலைவர்களின் காலில் விழுந்து முத்தமிட்டு வேண்டினார் போப் பிரான்சிஸ். இதுவரை இல்லாத மரபான இந்த செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2011ம் ஆண்டு, தெற்கு சூடான் புதிய நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இதன்பிறகு, 2013ம் ஆண்டு முதல் அங்கு உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. தெற்கு சூடான் அதிபர், சால்வா கிர் மற்றும் முன்னாள் துணை அதிபர் ரெய்க் மச்சார் ஆகியோர் நடுவேயான நீண்ட கால பனிப்போர்தான் இந்த உள்நாட்டு போருக்கான மூலம்.
இந்த நிலையில்தான், போப் பிரான்சிஸ் மரபுக்கு மாறாக, சூடானின் அவ்விரு தலைவர்களையும் மற்றும் 3 துணை அதிபர்களையும் வாடிகன் வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். "நான் உங்களின் சகோதரனாக கேட்க விரும்புவது அமைதியை நிலைநாட்டுங்கள். எனது இதயத்தில் இருந்து இந்த கோரிக்கையைவிடுக்கிறேன். முன்னேறிச் செல்லும் வழியை பாருங்கள். உங்ககள் பிரச்சினைகளை சரி செய்யுங்கள்" இவ்வாறு கூறிய போப் பிரான்சிஸ், அந்த தலைவர்களின் காலில் விழுந்து மன்றாடியதோடு, அவர்கள் கால்களில் முத்தமிட்டார்.
82 வயதாகும் போப் பிரான்சிஸ் இவ்வாறு செய்தது அங்கே குழுமியிருந்தவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெற்கு சூடானின் உள்நாட்டு போரால், இதுவரை 383,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே போப் பிரான்சிஸ், மனிதாபிமான அடிப்படையில், இவ்வாறு ஒரு செயலை செய்துள்ளார்.
Pope Francis gets down on his knees to kiss the feet of Salva Kiir Mayardit, President of South Sudan, and other opposition leaders who have just completed a spiritual retreat at the Vatican looking for peace in the country pic.twitter.com/u9yWyeOqh4
— Catholic Sat (@CatholicSat) April 11, 2019
தெற்கு சூடான் அதிபர் சால்வா கிர் மற்றும் முன்னாள் துணை அதிபர் ரெய்க் மச்சார் ஆதரவு படைகள், 2013ம் ஆண்டு டிசம்பரில் ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கலவரம் நாடு முழுக்க பரவி, இன்னும் மோதல் தொடருவது குறிப்பிடத்தக்கது.