தீவிரமடையும் ஏவுகணை தாக்குதல்... இருளில் மூழ்கிய உக்ரைன்.. வேகம் எடுத்த ரஷ்யாவின் அட்டாக்!
கீவ்: மின் உற்பத்தி மையங்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக தற்போது உக்ரைன் மின் உற்பத்தியில் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாக காலை 7 மணி முதல் இரவு 11 வரை மின் விநியோகம் தடைப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் குளிர்காலத்திற்குள் இந்த பாதிப்புகளை சரிசெய்யாவிடில் உக்ரைன் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.
போர்
சோவியத் யூனியன் காலத்தில் அந்நாட்டின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் 1991ம் ஆண்டு சோவியத் வீழ்ச்சிக்கு பின்னர் தனிநாடாக சென்றுவிட்டது. இவ்வாறு சென்ற உக்ரைனை நேட்டோவில் இணைக்க அமெரிக்கா முயற்சிக்க உக்ரைனும் சம்மதித்தது. ஆனால், உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் நேட்டோ படைகள் ரஷ்யாவுக்கு மிக அருகில் நிலைநிறுத்தப்படும் என்றும், இது அப்பிராந்தியத்தில் தேவையற்ற பதற்றத்தை அதிகரிக்கும் எனவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. எனவே நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரியில் ரஷ்ய ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
தாக்குதல்
இந்த போர் தொடங்கி சுமார் 7 மாதங்கள் ஆன நிலையில், தற்போது வரை உக்ரைனின் 15% நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மேலும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவியை செய்துள்ளன. இதுவரை அமெரிக்கா சுமார் ரூ.12.5 லட்சம் கோடி அளவுக்கு உதவிகளை உக்ரைனுக்கு செய்திருக்கிறது. அதாவது ரஷ்யா ஓராண்டுக்கு தனது ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ள தொகையில் இது மூன்றில் ஒரு பங்காகும். எனவே உக்ரைன் பதில் தாக்குதல் நடத்த தற்போது போர் தீவிரமடைந்துள்ளது.
மின் விநியோகம்
ரஷ்யாவும் பதிலுக்கு ட்ரோன் மற்றும், ஏவுகணை தாக்குதலை அதிகரித்துள்ளது. இது உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி மையங்களை கடுமையாக பாதித்துள்ளன. இதன் காரணமாக காலை 7 மணி முதல் இரவு 11 வரை மின் விநியோகம் தடைப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் குளிர் காலத்திற்குள் இந்த பாதிப்புகள் சரிசெய்யப்படாவிடில் உக்ரைன் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் உக்ரைன் அரசு அந்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் மீது கடும் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும், மூன்று பெரிய மின் உற்பத்தி மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன எனவும் அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும், ரஷ்யா நமது நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தற்போது குறிவைத்துள்ளது. ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் நடத்தப்படும் இத்தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் வரை நம்மால் மின் பற்றாக்குறை பாதிப்புகளிலிருந்து மீள முடியாது என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
நில நடுக்கோட்டிற்கு மேலே உள்ள உக்ரைன் குளிர்பிரதேசமாகும். கோடைக்காலங்களில் அங்கு இதமான வெப்பநிலை நிலவும் மற்றபடி பெரும்பாலும் 7-9°C என்கிற அளவில்தான் வெப்பநிலை இருக்கும். இந்நிலையில் குளிர்காலங்களில் மின் உற்பத்தி தடைப்பட்டால் அம்மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.