பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்
பாகிஸ்தான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் இருந்த பலரும் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நில நடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால் அங்கு மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு 8-10-2005 அன்று 7.6 அளவிற்கு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 3.5 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கைபர் பாக்டுங்க்வா தான் பெருமளவில் பாதிக்கப்பட்டது . 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அதே நாளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோ நிலநடுக்க மீட்புப் பணியில் ராக் ஸ்டாரான 'ஃப்ரைடா' மோப்ப நாய்! தெறிக்கிறது லைக்ஸ்
இதே போல கடந்த 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் 5.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது. இதில் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவுக்கு தென்மேற்கில் 330 கிமீ சுற்றளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த 2013ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் பக்தூன்கவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.