வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியர்களோடு இணைந்து தீபாவளியைக் கொண்டாடினார்.
டிரம்ப்பின் ஓவல் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அவரது மகள் இவாங்கா டிரம்ப், இந்திய அமெரிக்கர்களான நிக்கி ஹாலே, சீமா வர்மா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் முதன் முதலில் தீபாவளி கொண்டாட்டத்தை துவங்கி வைத்தவர் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆவார். அனால் அவர் வெள்ளை மாளிகையின் ஒரு தளத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஒரு ஆரம்பமாக முதல் சுழியை இட்டிருந்தாலும் தனிப்பட்ட முறையில் அக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதில்லை.
அதிபர் புஷ்ஷுக்குப் பின் வந்த அதிபர் ஒபாமாதான் தீபாவளி கொண்டாட்டத்தில் நேரடியாக கலந்து கொண்ட முதல் அமெரிக்க அதிபர் ஆவார். இப்போது அவரைத் தொடர்ந்து டிரம்ப்பும் இதில் கலந்து கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர்களிலேயே "இந்துத்துவா" மீது பெரும் பிரியம் காட்டி வருபவர் டிரம்ப். இந்த கொண்டாட்டத்தின்போதும் இந்துக்களின் விழா என்று தீபாவளியை அவர் குறிப்பிடத் தவறவில்லை.
நிகழ்ச்சியின்போது டிரம்ப் பேசுகையில், இந்துக்களின் தீப ஒளித் திருநாளான தீபாவளியைக் கொண்டாட இங்கு இந்திய சமுதாயத்தினரோடு கூடியிருப்பது மகிழ்ச்சி தருகிறது, கெளரவமாக உணர்கிறேன். இந்திய மக்களை இந்த நேரத்தில் நாம் நினைவு கூர வேண்டும். உலகின் மிகப் பெரிய , பழமையான ஜனநாயகத்தை கட்டியமைத்தவர்கள் அவர்கள். பிரதமர் மோடியுடன் எனது உறவு நெருக்கமாக உள்ளதை இந்த நேரத்தில் மதிப்புடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் டிரம்ப்.
- Inkpena சஹாயா