ராஜபக்சேவைச் சந்தித்தார் மன்மோகன் சிங்: அமெரிக்கத் தீர்மானம் குறித்து பேச்சு?
நேபியிடா: மியான்மரில் இன்று நடைபெறும் பிம்ஸ்டெக் நாடுகளின் மூன்றாவது உச்சி மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.
பிம்ஸ்டெக் என்ற பெயரில் பல்துறை தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக வங்கக்கடல் நாடுகள் ஓரணியாக செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பில், இந்தியா, வங்காளதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய 7 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த பிம்ஸ்டெக் நாடுகளின் மூன்றாவது உச்சி மாநாடு மியான்மரின் நேபியிடாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. நிறைவுநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டு பேசுகிறார்.

இதற்காக இரண்டு நாள் பயணமாக அவர் நேற்று மியான்மர் சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி மன்மோகன்சிங்குக்கு வரவேற்பளிக்கப்பட்டது. பிரதமர் என்ற வகையில் மன்மோகன்சிங் மேற்கொள்கிற கடைசி பயணமாக இதுவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டில் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் மன்மோகன்சிங். அந்தச் சந்திப்பின் போது இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து ராஜபக்சே மன்மோகன் சிங்கிடம் பேசுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கிடையே மன்மோகன்சிங் - ராஜபக்சே சந்திப்புக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications