"எங்களுக்கு வேறு வழி இல்லை.." உக்ரைன் மீது போர் ஏன்? ரஷ்ய அதிபர் புதின் பரபர பேச்சு
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்துள்ள நிலையில், இது குறித்து அந்நாட்டின் அதிபர் விளாடிமர் புதின் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த சில மாதங்களாகவே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது. குறிப்பாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா அதிகப்படியான ராணுவத்தைக் குவித்து வந்தது.
அப்போது போர் தொடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றே ரஷ்யா தொடர்ந்து கூறி வந்தது. இருப்பினும், மேற்குலக நாடுகள் ரஷ்யாவின் திட்டம் போர் தொடுப்பது தான் என்று உறுதியாகக் கூறி வந்தது.

ரஷ்ய பாதுகாப்புத் துறை
மேற்குலக நாடுகள் எச்சரிக்கை விடுத்தப்படியே ரஷ்யா வியாழக்கிழமை உக்ரைன் மீது தொடுத்தது. இதனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், உக்ரைன் படையெடுப்பின் முதல் நாள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் 11 விமானப்படைத் தளங்கள் உட்பட 74 ராணுவ தளங்களை அழித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா ராணுவம் காலை முதல் குறைந்தது 203 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் போலீஸ் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

வேறு வழி இருக்கவில்லை
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இதனிடையே ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைன் மீது போர் தொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். மேலும், ரஷ்யா சர்வதேச பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகவே இருக்க விரும்புவதாகவும், அதற்குத் தீங்கு விளைவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் புதின் கூறினார்.

ரஷ்யாவின் விருப்பம்
இது தொடர்பாக ரஷ்யாவில் உள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு புதின் அளித்த பேட்டியில், "உலகப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் விருப்பம். இப்போதும் கூட சர்வதேச பொருளாதாரத்தின் ரஷ்யா உள்ளது. எனவே, உலகப் பொருளாதாரத்தை நாங்கள் சேதப்படுத்தப் போவதில்லை. அது எங்கள் திட்டமும் இல்லை. சர்வதேச பொருளாதாரத்தில் இருந்து விலகும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை.

திட்டம் இல்லை
இதை உலகின் மற்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த உக்ரைன் மீதான எங்கள் நடவடிக்கைகளைத் தடுக்க உலக நாடுகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடி தொடங்கி உலகின் பல்வேறு நாட்டின் தலைவர்களும் ரஷ்யா போரை வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், புதினின் இந்த பேச்சு ரஷ்யாவுக்கு போரை வாபஸ் பெறும் திட்டம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
Recommended Video

என்ன காரணம்
சோவியத் ஒன்றியத்தில் ஒரே நாடாக இருந்த ரஷ்யா, உக்ரைன் புவியியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளது. ரஷ்யாவுடன் எல்லையைப் பகிரும் நாடாக இருக்கும் உக்ரைன் கடந்த சில ஆண்டுகளாகவே நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தது. அப்படி நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் அது தனக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றே கருதியே ரஷ்யா இந்த போரை ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications