காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவேன்... சிங்கப்பூரில் ராகுல்காந்தி உறுதி!
சிங்கப்பூர் : நாட்டில் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி அதன் மூலமாக பாஜ தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அரசியல் சூழ்ச்சியை கையாளுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக நாட்டு மக்களின் அமைதி பற்றி குறைந்த அளவிலேயே அக்கறை செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 3 நாள் பயணமாக மலேசியா சென்றுள்ளார். நேற்றைய தினம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் நிறுவனங்களின் செயல் அதிகாரிகளை ராகுல்காந்தி சந்தித்தார். அவர்களிடம் வேலைவாய்ப்புகள், முதலீடுகள் மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்து ராகுல் காந்தி விவாதித்தார்.
சமநிலையுடன் கூடிய புதிய சமுதாயம் முறை வளர்ந்து வருவதை காங்கிரஸ் கட்சி உற்று நோக்குவதாகவும், இதற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டப்படும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் கட்சியின் தலைவர் பதவி சோனியாகாந்தியிடம் இருந்து ராகுல்காந்தி வசம் வந்த நிலையில் இத்தகைய அறிவிப்பை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக திட்டமிட்டே ஐக்கிய முற்போக்கு கூட்டணியை குற்றம்சாட்டியதாகவும், டெல்லி நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கடந்த டிசம்பரில் விடுதலை செய்ததையும் ராகுல் சுட்டிக்காட்டி பேசினார்.
2012 - 2014 கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய புயலை சந்தித்தது, திட்டத்தில் ஏற்பட்ட சீர்குலைவின் விளைவுகளை நாங்கள் சந்தித்தோம். ஆனால் தற்போது தெளிவு கிடைத்துவிட்டது, எனவே புதிய காங்கிரஸ் கட்சியை நாங்கள் அறிமுகம் செய்வோம் என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
இந்தியாவில் கிராமப்புற மக்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதனால் நமக்கான சவால்கள் அதிக அளவில் இருக்கிறது. நம்முடைய நோக்கம் என்பது இந்த இடம்பெயர்வு அமைதியானதாக இருக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவிடத்தில், அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நினைவிடம் இந்திய தேசிய ராணுவத்தால் 1923ல் உருவாக்கப்பட்டது. அதற்கான அடிக்கல் 1950ல் அப்போதைய இந்திய பிரதமர் நேருவால் நாட்டப்பட்டது. தற்போது நினைவிடத்தை ராகுல் காந்தி பார்வையிட்டுள்ளார். அடுத்த 3 தினங்களுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள இந்தியர்கள், வர்த்தக தலைவர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களை ராகுல் காந்தி சந்திக்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.