இதயக் கோளாறுக்கு “குட்பை” – புதிய மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
நியூயார்க்: இதயக் கோளாறுகளைச் சரி செய்ய புதிய மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
இந்த மருந்தால் பல லட்சம் பேரின் உயிரைக் காக்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது உள்ள சிகிச்சை முறைகளையெல்லாம் ஓரம் கட்டி விடும் இந்த புதிய மருந்து என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எல்சிஇசட் 696:
இந்த மருந்துக்கு தற்போதைக்கு எல்சிஇசட் 696 என்று பெயரிட்டுள்ளனர். சோதனை அளவில் இந்த மருந்து தற்போது உள்ளது.
20 சதவீதம் வெற்றி:
இந்த மருந்தை 8000க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் பரிசோதித்தபோது 20 சதவீதம் பேருக்கு அது நல்ல விளைவைக் கொடுத்தது தெரிய வந்துள்ளதாம்.
பரிசோதனைகள்:
இதுகுறித்து இந்த பரிசோதனைகளை நடத்தி வரும் குழுவின் இணைத் தலைவரும், கிளாஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியருமான ஜான் மெக்முர்ரே கூறியுள்ளார்.
சிறப்பாக வேலை செய்யும் மருந்து:
தற்போது உள்ள கோல்ட் ஸ்டாண்டர்ட் சிகிச்சை முறையை விட நாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய மருந்து மிகச் சிறப்பாக வேலை செய்கிறது. இது இதயக் கோளாறுகள் குறித்த ஆய்வில் மிக முக்கியத் திருப்பமாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.
9 லட்சம் இதய நோயாளிகள்:
இங்கிலாந்தில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் இதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பலரும் வயதானவர்கள். மேலும் ஆண்டுக்கு 1.40 லட்சம் பேர் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் உயிரிழக்கின்றனர்.
மரணத்திற்கு அடித்தளம்:
உடல் எடை அதிகரிப்பு, மூச்சுத் திணறல், இதயத் துடிப்பு அதிகரிப்பு உள்ளிட்டவை மாரடைப்புக்கும், பின்னர் மரணத்திற்கும் வித்திடுகின்றன.
மாரடைப்பின் காரணம்:
ரத்தத்தை சரியான முறையில் இதயம் பம்ப் செய்ய முடியாமல் போகும்போது மாரடைப்பு வருகிறது. ரத்தம் குறைவாக பாயும்போது ஆஞ்சியோடென்சின் 2 மற்றும் நொரட்ரீனலின் ஆகிய ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கப்படுகின்றன. இவை ரத்தக் குழாய்களை சுருக்கி ரத்தத்தை நிறுத்தி, மாரடைப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
பலவீனமாகும் இதயம்:
இந்த ஹார்மோன் சுரப்பு சிறிய அளவில் இருக்கும்போதே அதை சரி செய்வது நல்லது. அது அதிகரிக்கும்போது இதயம் பலவீனமாகி ரத்தம் பாய்வது முற்றிலும் நின்று மாரடைப்புக்கு வழி ஏற்பட்டு விடுகிறது. மேலும் சிறுநீரகத்தையும் அது பாதித்து விடுகிறது.
ஹார்மோன் பெருக்கம்:
தற்போது நடைமுறையில் உள்ள எனல்ப்ரில் மருந்தானது இந்த ஹார்மோன் பெருக்கத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் இது மெதுவாகத்தான் நடைபெறும். ஆனால் அதற்குள் இதயம் மேலும் பலவீனமாகி விடும் வாய்ப்பு உள்ளது.
கூடுதல் பலன்கள்:
இந்த நிலையில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள LCZ696 சிகிச்சை முறையானது, கூடுதல் பலன்களுடன் உள்ளதாம். இதை மாத்திரையாக சாப்பிடலாம்.
ஒரு நாளைக்கு 2 மாத்திரை:
ஒரு நாளைக்கு 2 மாத்திரை போதுமாம். இந்த மாத்திரையானது தேவையில்லாத ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, ரத்தம் பம்ப் செய்யப்படுவதையும் சீராக்க உதவுகிறதாம்.
ரத்த நாளங்களின் ரிலாக்ஸ்:
மேலும் சிறுநீரகத்தையும் பாதிப்பிலிருந்து தடுத்து சிறுநீர் சரியாக பிரிவதையும் இது உறுதி செய்கிறதாம். மேலும் ரத்த நாளங்களையும் இது ரிலாக்ஸ் செய்ய உதவுகிறதாம். இதன் மூலம் இதயம் பலவீனமாவது மற்றும் செயலிழப்பது ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்படும் என்று கூறுகிறார் பேராசிரியர் மெக்முர்ரே.
நோயாளிகள் நலம்:
இந்த மருந்து குறித்த பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட 8400 நோயாளிகளுக்கு 200 மில்லி கிராம் எல்சிஇசட் 696 மாத்திரை அல்லது 10 மில்லி கிராம் எனால்பிரில் மாத்திரை ஒரு நாளைக்கு இரண்டு முறை தரப்பட்டது.
இறப்பு சதவீதம் குறைவு:
இதில் இதய நோயால் பாதிக்கப்பட்டு, புதிய மருந்து கொடுக்கப்பட்டவர்களில் 914 பேர் இதய பாதிப்பால் உயிரிழந்தனர். இவர்களின் அளவு 21.8 சதவீதமாகும். அதேசமயம், தற்போது நடைமுறையில் உள்ள எனால்பிரில் மருந்தை உட்கொண்டர்களில் 1117 பேர் உயிரிழந்தனர். அதாவது இறப்பு சதவீதம் 26.5 சதவீதமாகும்.
தடுக்கலாம் உயிரிழப்பை:
புதிய மருந்தின் மூலம் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேரின் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்று தெரிய வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மருத்துவமனை வாசம் குறைவு:
மேலும், புதிய சிகிச்சை முறையின் மூலம் நோயாளி நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலையும் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நோவார்டிஸ் போட்டி:
இந்தப் புதிய மருந்தைத் தயாரிக்கும் உரிமத்தை பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் கோரியுள்ளது. அடுத்த ஆண்டு இதற்கான உரிம விண்ணப்பத்தையும் அது தாக்கல் செய்யவுள்ளது. அனேகமாக இந்த மருந்து 2015 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு வரும் என்றும் நம்பப்படுகிறது.