வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் மாட்டிய 12 சிறுவர்கள்.. 1000 பேரின் மீட்பு பணி.. சிலிர்க்க வைக்கும் கதை
சரியாக 10 நாட்களுக்கு முன் தாய்லாந்து குகைக்குள் காணமால் போன 12 பள்ளி கால்பந்து அணி வீரர்களும், 1 பயிற்சியாளரும் தற்போது மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
பாங்காக்: சரியாக 10 நாட்களுக்கு முன் தாய்லாந்து குகைக்குள் காணமால் போன 12 பள்ளி கால்பந்து அணி வீரர்களும், 1 பயிற்சியாளரும் தற்போது மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது உலகம் முழுக்க ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் களைகட்டி இருக்கிறது. இதே மாதத்தில்தான் அந்த மோசமான சம்பவமும் நடந்தது. தாய்லாந்து பள்ளி ஒன்றை சேர்ந்த, கால்பந்து அணி அங்கிருக்கும் குகை ஒன்றுக்குள் காணாமல் போனார்.
உலகின் மிகவும் சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் மாட்டினார்கள். கடந்த 9 நாட்களாக இவர்களுக்கு என்ன ஆனது என்று கூட தெரியவில்லை. ஆனால் இப்போது அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யார் இவர்கள்
இவர்கள் எல்லோரும் தாய்லாந்து பள்ளி மாணவர்கள். முழுதாக 15 வயது கூட நிரம்பாத, ஒடிந்த தேகம் கொண்ட, போஷாக்கற்ற குழந்தைகள். உலகக் கோப்பை போட்டி நடக்கும் அதே சமயத்தில் நடக்கும் கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள சென்று இருக்கிறார்கள். அப்படி சென்றவர்கள் தங்கள் பயிற்சியாளருடன், தாய்லாந்தின் அழகிய தி தம் லுஅங் குகையை முழு அனுமதி வாங்கி பார்க்கவும் சென்று இருக்கிறார்கள்.
எப்படிப்பட்ட குகை
இந்த பிரச்சனையை பற்றி தெரிந்து கொள்ளும் முன் இந்த குகையை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் மிகவும் அழகான, ஆபாத்தான விஷயங்களை பட்டியலிட்டால், அதில் இந்த குகையும் சேர்க்கலாம். இந்த குகை இயற்கை கொடுத்த அழகான அற்புதங்களில் ஒன்று. இதன் உள்ளே செல்வதும் வெளியே செல்வதும் மிகவும் கடினமான ஒன்று. ஆனால் உள்ளே சென்றதில் இருந்தே வயிற்றுக்குள் அட்ரலின் கொஞ்சம் அதிக ரேட்டில் சுரக்க வைக்கும் அளவிற்கு பயமுறுத்தவும் கூடியது. இயற்கைக்கு முன் மனிதன் ஒன்றுமே இல்லை என்பதை இந்த குகையை பார்த்த அடுத்த நொடி தெரிந்து கொள்ளலாம்.
நடந்தது என்ன
இந்த குகைக்குள் தான் அந்த 12 கால்பந்து சிறுவர்களும், 25 வயது கூட நிரம்பாத கால்பந்து பயிற்சியாளர்களுக்கு சென்று இருக்கிறார்கள். கால்பந்து போட்டியில் வென்றுவிட்டு குஷியில் குகையை சுற்றிபார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. அவர்கள் கொஞ்சம்மும் எதிர்பார்க்காத வகையில், குகைகள் எங்கிருந்தோ வெள்ளம் புகுந்து இருக்கிறது. இதை கொஞ்சமும் எதிர்பார்காதவர்கள் குகைக்குள்ளே சிக்கி இருக்கிறார்கள்.
என்ன ஆனது
குகை முழுக்க தண்ணீர். இந்த குகையே ஒரு சிறிய கிராமத்தின் அளவிற்கு இருக்கும். வெள்ளத்தால் குகைக்குள் யாரும் செல்ல முடியாது. வெள்ளத்தையும் தாக்குப்பிடித்து, குகைக்குள் ஒருவர் உயிரோடு இருந்தால், கண்டிப்பாக அவரால் வெளியேற முடியாது. அப்படியே வெளியேற வேண்டும் என்றால் அக்டோபர் மாதம் வரை (காரணம் இருக்கிறது!) காத்திருக்க வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் அந்த 13 பேரும் உலகத்தோடு முற்றிலும் தொடர்பற்று போனார்கள்.
எவ்வளவு நாளாக
ஒருநாள், இரண்டாவது நாள் இரவு, மூன்றாவது நாள், ஒரு வாரம், என்று நாட்கள் சென்று கொண்டே இருந்தது. உள்ளே 13 உயிர்கள் எப்படி இருக்கிறது என்று வெளியே யாருக்கும் தெரியவில்லை. வெளியே நாம் காணமல் போனது யாருக்காவது தெரியுமா என்று உள்ளே இருந்தவர்களுக்கு தெரியாது. நிமிடம் நகர நகர, 9 நாட்கள் காணமல் போய் உள்ளது. இன்றோடு அந்த குகைகள் அவர்கள் சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டது.
சாப்பாடு
முதல் ஒரு நாளில் மட்டும் கையில் இருந்த தின்பண்டங்களை வைத்து சமாளித்து இருக்கிறார்கள். அதன்பின் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே அந்த சிறுவர்கள் மிகவும் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் என்பதால் , சாப்பாடு இல்லாமல் திண்டாடி இருக்கிறார்கள். அழைத்து வந்த பயிற்சியாளரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார். வெள்ளமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.
பூஜை செய்தனர்
அவர்கள் அந்த குகைகள் சென்று வெள்ளத்தில் மாட்டிய செய்தி உலகம் முழுக்க செய்தியானது. ஆனால் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாது. இங்குதான் முதல் அதிசயம் நடந்தது. அந்த குகைக்கு வெளியே பல்வேறு மதத்தை சேர்ந்த குருமார்கள், பாதிரியார்கள், புத்த பிட்சுக்கள் கூடினார்கள். மக்களோடு மக்களாக சேர்ந்து பூஜை செய்தார்கள். 12 சிறுவர்களுக்காகவும் 1 இளைஞர்களுக்காகவும் அவர்கள் கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தனர்.
இறந்துவிட்டார்கள்
இதில் பல சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் மகன் இறந்துவிட்டான் என்று முடிவுகட்டி இருக்கிறார்கள். சிலர் அந்த பள்ளி மீது புகார் கொடுக்க வேண்டும் வழக்கு தொடுக்க வேண்டும் என்று கூட முடிவெடுத்து இருக்கிறார்கள். எங்கள் மகன் இறந்துவிட்டான், அவனை தண்ணீர் கொண்டு சென்றுவிட்டது என்று செய்திகளில் சில பெற்றோர்கள் கண்ணீர் வடித்து இருக்கிறார்கள்.
களமிறங்கினர்
இந்த நிலையில் முதலில் தாய்லாந்தின் கடற்படையால் சீல் (SEAL) மீட்பு பணியில் ஈடுபட்டது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி சென்றது. ஆனால் அவர்களுக்கு, அந்த சிறுவர்கள் எங்கே என்று சின்ன குறிப்பு கூட கிடைக்கவில்லை. ஒருவாரமாக இந்த குழு அந்த குகை முழுக்க தேடியது. கிட்டத்தட்ட 280 பேர் ஒன்றாக சேர்ந்து அந்த குகைகள், வெள்ளத்திற்குள் மூழ்கி, இங்கும் அங்கும் நீந்தி தேடி சென்றார்கள்.
1000 பேர் வந்தனர்
அதன்பின்தான் இரண்டாவது ஆச்சர்யம் நடந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து , சீனா என்று எல்லா நாடுகளும் தங்கள் கடற்படையை உதவிக்கு அனுப்பியது. கடினமான கடல் ஆழத்திலும் குண்டுமணியை கண்டுபிடிக்கும் திறமைவாய்ந்த இங்கிலாந்து கடற்படை வீரர்களும் உதவிக்கு வந்தனர். மொத்தமாக 13 பேரை கண்டுபிடிக்க 1000 பேர் களமிறங்கினார்கள்.
கண்டுபிடித்தார்கள்
இங்குதான் மூன்றாவது அதிசயம் நடந்தது. 1000 பேரின் கடினமான தேடல் தோல்வியில் முடியவில்லை. இரண்டு திறமையான இங்கிலாந்து வீரர்கள், குகைகள் சிக்கி இருந்த 13 பேரையும் கண்டுபிடித்தார்கள். அந்த 13 பேரும் கடுமையான வெள்ளத்தில், உயரமான குன்றின் மீது குகையில் தங்கள் ஒடுக்கி வைத்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். உடலுக்கு பையில் இருந்த பாலீதின் பையை சுற்றிக்கொண்டு குளிரில் இருந்து தப்பித்துக் கொண்டு இருந்தனர்.
|
வீடியோ வெளியிட்டனர்
இந்த நிலையில் இதை முதலில் வெளியே தெரிவிக்க வேண்டும் என்று, அந்த இங்கிலாந்து வீரர்கள் அந்த 13 பேரையும் வீடியோ எடுத்தனர். எல்லோரும் தங்கள் பெயரை சொல்லி நாங்கள் தைரியமாக இருக்கிறோம் என்று ஆசியா ஸ்டைலில் வணக்கம் வைத்தனர். உள்ளே இருப்பவர்களுக்கு உயிர் இருப்பது தெரிந்த பின்தான் வெளியே இருப்பவர்களுக்கு உயிர் வந்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
பிரச்சனை என்ன
ஆனால் பிரச்சனை இங்குதான் தொடங்கியது. ஏற்கனவே கூறியது போல அங்கு ஒருவர் ஜூலை மாதம் மாட்டி உயிரோடு இருக்கிறார் என்றால் அவரை காப்பாற்ற அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும்.அக்டோபர் வரை அங்கு கனமழை பெய்யும். அதுவரை உள்ளே இருக்கும் வெள்ளத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கூட குறையாது. ஆனால் அதுவரை அவர்கள் உள்ளே இருப்பதும் கஷ்டம்.
யோசனை
அப்போதுதான் முதல் ஐடியா கொடுத்தனர் அமெரிக்க படையினர். அதன்படி உள்ளே இருக்கும் கால்பந்து வீரர்களுக்கு உயிர்க்காக்கும் உடை கொடுத்து தண்ணீரில் மிதக்க வைத்து கொண்டு வந்துவிடலாம் என்றனர். ஆனால் ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டி, என்ன செய்து அவர்களை கொண்டு வர முயற்சித்தாலும், அந்த குகையின் குறுகலான பாதையை சிறுவர்களால் பயிற்சி பெற்ற வீரர்கள் போல கடக்க முடியாது. சில உயிர்களை இழக்க நேரிடும் என்றுள்ளனர்.
யோசனை 2
இதனால் ஐடியா ஒன்றை கைவிட்டுவிட்டு ஐடியா இரண்டை கையில் எடுத்து இருக்கிறார்கள். அதன்படி குகையின் வேறு பகுதியில் துளையிட்டு அதுவழியாக தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிட்டு, மாணவர்களை வெளியே கொண்டு வரலாம் என்று முடிவெடுத்துள்ளனர். உள்ளே இருப்பவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் குகையை குடாய முடிவெடுத்து, அதற்கான பகுதியை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
விரைவில்
உள்ளே இருக்கும் 13 பேரும் வீடியோவில் மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசி இருக்கிறார்கள். தாங்கள் எப்படியும் வெளியே வருவோம் என்று கூறியுள்ளனர். அவர்களுக்கே இத்தனை நாடுகள் களமிறங்கியதும், பல மத குருக்கள் பிராத்தனை செய்ததும் வெளியே வந்து பார்த்தால் ஆச்சர்யமடைவார்கள். அந்த நாளுக்காக தாய்லாந்து மக்கள் காத்திருக்கிறார்கள்.