39 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிக்கு இன்று விடுதலை – அமெரிக்காவில் மன்னிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் 39 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று விடுதலை செய்யப்படுகின்றார்.
அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்துக்கு உட்பட்ட கிளீவ்லேண்ட் பகுதியில் கடந்த 1975 ஆம் ஆண்டு விற்பனை பிரதிநிதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை எட்டி வெர்னோன் என்ற 12 வயது சிறுவன் நேரில் பார்த்ததாக கூறியதன் அடிப்படையில், ரிக்கி ஜாக்சன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ரிக்கி ஜாக்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. எனினும் அவர் கடந்த 39 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த கொலை சம்பவத்தை தான் பார்க்கவில்லை என எட்டி வெர்னோன் தற்போது கூறியுள்ளார். மேலும் அந்த நேரத்தில் தான் பள்ளி வேனில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
வெர்னோனை தவிர இந்த கொலை சம்பவத்தில் ஜாக்சனுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிர்ச்சியடைந்த அரசு தரப்பு வக்கீல் இந்த வழக்கில் இருந்து ஜாக்சனை விடுவிக்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து கிளீவ்லேண்ட் நீதிபதி, ரிக்கி ஜாக்சனுக்கு மன்னிப்பு வழங்கி விட்டார். அதன்படி அவர் இன்று விடுதலையாவார் என தெரிகிறது.