ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் நேரடியாக களமிறங்கும் ரஷ்யா- உதவிக்கு இஸ்ரேல், ஹெஸ்புல்லா!
பெய்ரூட்: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இக்கத்தினருக்கு எதிராக ரஷ்யா தலைமையில் ஐந்து நாடுகள் கூட்டணி அமைத்துள்ளன. இது அமெரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரை ஒடுக்க அந்த நாட்டு அரசுகளால் முடியவில்லை. எனவே, அமெரிக்கா வான் வெளி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்து வருகிறது.
ஆனால், அமெரிக்காவின் தாக்குதல் வேண்டாவெறுப்பாகவே உள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஒரு பக்கம் இவர்கள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டே இன்னொரு புறம் சிரியா அதிபர் ஆசாத் அல் பஸாருக்கு எதிரான பேராாளிக் குழுக்களுக்கு, குறிப்பாக ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு, உதவிகளையும் வழங்கி வருகிறது அமெரிக்கா. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் சிரியா அதிபருக்கு எதிராகவும் செளதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளும் உதவி வருகின்றன.
இதனால் தான் அல் பஸாருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் முழு உதவிகள் அளித்து வருகிறார். கூடவே தனது ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் ஈரானும் அல் பஸாருக்கு ஆயுத உதவிகள் அளித்து வருகிறது.
அதே போல லெபனான் நாட்டின் ஷியா இஸ்லாமிய பிரிவின் ஆயுதம் தாங்கிய அமைப்பான ஹெஸ்பொல்லா படைகளும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகின்றன.
இதுவரை இந்தப் போரில் மறைமுகமாக சிரியாவுக்கு உதவி வந்த ரஷ்யா இப்போது ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முழு அளவில் களமிறக்க முடிவு செய்துள்ளது.ரஷ்ய நாட்டின் போர் வீரர்களும், விமானங்களும், சிரியாவில் ஏற்கனவே முகாமிட தொடங்கிவிட்டன. ட்ரோன்கள் எனப்படும் ரகசிய விமானங்கள் மூலம், தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் கண்காணிக்கப்பட தொடங்கிவிட்டன. மிக விரைவிலேயே ரஷ்யா தனது தாக்குதலை தொடங்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் இந்த திட்டத்துக்கு ஈரான் ஆதரவு ஏற்கனவே உள்ளது. இப்போது ரஷ்யாவுக்கு, இஸ்ரேல் ஆதரவும் கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் ஹெல்புல்லாவும் முழு அளவில் இணைந்து தாக்குதல் நடத்த உள்ளது.
இத்தனைக்கும் லெபனானில் இஸ்ரேலுடன் மோதி வருகிறது ஹெஸ்புல்லா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா தான் வழக்கம்போல் இரட்டை நாடகம் போட்டு வருகிறது. ஐஎஸ் தீவிரவாதிகளை உருவாக்கியதே அமெரிக்கா தான் என்பது சிரிய அதிபர் அல் பஸாரின் நேரடிக் குற்றச்சாட்டாகும்.அமைதியாக இருந்த சிரியாவில் ஐஎஸ் அமைப்பை ஏவி விட்டு பிரச்சனையை உருவாக்கிவிட்டது அமெரிக்காவும் செளதி அரேபியாவும் தான் என்கிறார் அல் பஸார்.
அதே நேரத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் அத்துமீறல்கள் அளவு கடந்து போய்க் கொண்டு இருப்பதால், அவர்களை ஒடுக்குவது போல உலகத்தின் முன் நாடகம் போட வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு.இதனால் தான் அவ்வப்போது விமானத் தாக்குதலை நடத்திவிட்டு அமைதி காத்து வருகின்றன அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளும்.
இப்போது சிரியாவில் நடந்து வரும் இந்த உள்நாட்டுப் போரால் லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி ஐரோப்பாவை நோக்கி தஞ்சம் கேட்டு வருவதால், ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிலைக்கு ஐரோப்பிய நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.ஆனால் இதில் அமெரிக்கா முழு மனதோடு களமிறங்காத வரை ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவது சாத்தியமில்லை.
இந் நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதாக சொல்லிக் கொண்டு ரஷ்யாவே நேரடியாக சிரியா போரில் தலையிடுவதையும் அமெரிக்காவால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
தனது இரட்டை வேடத்தை கலைந்துவிட்டு இந்த ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா உடனடியாக களமிறங்காவிட்டாலும், சிரியாவில் ரஷ்ய ஆதிக்கத்தை ஒடுக்க ஏதாவது செய்யும் என்பது மட்டும் நிச்சயம்.