சிரியாவில் தாக்குதல் நடத்த ரஷ்யாவுக்கு கைகொடுத்த ஜோர்டான்
அம்மான்: சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீதான வான்வழித் தாக்குதலுக்கு ஜோர்டானும் ஆதரவு தெரிவித்துள்ளதுது. இதற்காக ஜோர்டானின் அம்மானில் தகவல் ஒருங்கிணைப்பு மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக வெடித்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது.
அதே நேரத்தில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது ரஷ்யா படைகள் களத்தில் இறங்கி கடும் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது.
இந்நிலையில், ரஷ்யா மற்றும் ஜோர்டான் நாட்டு கூட்டுப்படைகள் ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளன. இருநாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான தகவல்களை பரிமாறிக் கொள்ள இருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இருநாட்டு அதிபர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் அடிப்படையில் இருநாடுகளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட முடிவெடு்த்துள்ளது. .மேலும், தீவிரவாத ஒழிப்பில் ரஷ்யா ஏற்கனவே ஈரான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறது.
சிரியாவில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் விவகாரத்தில் ஜோர்டானும் தற்போது ஒத்த கருத்தைக் கொண்டுள்ளது.