ஆக்ஸ்போர்ட் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை மிக்ஸ் செய்து சோதிக்கும் ரஷ்யா
மாஸ்கோ: ஸ்புட்னிக் வி மற்றும் ஆகஸ்போர்ட் தடுப்பூசிகளை இணைத்துச் சோதிக்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட சில தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனா வைரஸ் ஒப்பீட்டளவில் புதிய வகை வைரஸ் என்பதால் எந்த வகையான தடுப்பூசிக்கு கொரோனா முழுமையாகக் கட்டுப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதன் காரணமாகப் பல தடுப்பூசிகளை பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.
ஒன்றல்ல, நான்கு வகையான உருமாறிய கொரோனா வைரஸ்கள்.... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
ஸ்புட்னிக் வி
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யா ஒப்புதல் அளித்தது. இருப்பினும், மூன்றாம்கட்ட சோதனைக்கு முன்னரே இந்தத் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டதால் உலக ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டினர். அதைத்தொடர்ந்து ஐக்கிய அமீரகம், உக்ரைன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் மருத்துவ சோதனைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆகஸ்போர்ட் தடுப்பு மருந்து
அதேபோல பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்துடன் இணைந்து மற்றொரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கினர். இந்தத் தடுப்பூசிகள் 90% வரை பலனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான தடுப்பூசியை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் ஆகும் செலவு குறைவு என்பதால் இந்த தடுப்பூசியை உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிக்ஸ் செய்து சோதனை
இந்நிலையில், ஸ்புட்னிக் வி மற்றும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளை இணைத்து உக்ரைனில் புதிய சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்ய அந்நிய நேரடி முதலீட்டு நிதியம் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உலகெங்கும் விற்னை செய்யும் பொறுப்பு ரஷ்ய அந்நிய நேரடி முதலீட்டு நிதியகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இரு தடுப்பூசிகளை இணைப்பதன் மூலம் தடுப்பாற்றலை அதிகரிக்க முடியுமா என்பது குறித்த சோதனைகளில் ஈடுபடவுள்ளதாக ரஷ்யா கடந்த மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு
உலகெங்கும் கடந்த 24 மணி நேரத்தில் 5.49 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.49 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று ஒரே நாளில் 8,000 மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது.