நல்ல காலம் பொறக்குது.. எதிர்காலம் இந்தியாவின் கையில்! மோடி ஆட்சி பற்றி ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
சமீபத்தில் மாஸ்கோவில் வால்டாய் டிஸ்கஷன் கிளப் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்ற புடின் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையின்மை பிரச்னை, மதக்கலவரங்கள், பாலியல் குற்றங்கள், பாலியல் குற்றவாளிகள் விடுதலை என பாஜக மீதும் பிரதமர் மீதும் தொடர் குற்றச்சாட்டுகள் மேலெழுந்துள்ள நிலையில், புதின் மேற்குறிப்பிட்டவாறு கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று 'வால்டாய் டிஸ்கஷன் கிளப்' சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அந்நாட்டு அதிபர் புதின், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது" என்று கூறியுள்ளார். நிகழ்ச்சி நெறியாளர் இந்திய பிரதமர் மோடி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு புதின் இவ்வாறு பதிலளித்துள்ளார். தொடர்ந்து பேசிய புதின், "நாட்டு மக்களுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று,

நல்ல எதிர்காலம்
இந்தியா போன்ற நாடுகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு பல பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே வலுவான அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. எங்களுக்குள் எப்போதும் பிரச்னை இருந்தது கிடையாது. இப்போதும் அதேபோலதான் இருக்கிறோம். இனியும் இந்த நட்பு தொடரும். அதேபோல இரு நாடுகளுக்கு இடையேயும் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் உரங்கள் விநியோகத்தை அதிகரிக்குமாறு பிரதமர் எங்களிடம் கேட்டுக்கொண்டார். நாங்களும் விநியோகத்தை 7.6 மடங்கு அதிகரித்தோம்.

சலசலப்பு
பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்து பின்னர் அதிலிருந்து மீண்டு தற்போது புதிய பாதையில் இந்தியா பயணித்துக்கொண்டிருக்கிறது. இது உலக நாடுகள் மத்தியில் அந்நாட்டின் மதிப்பை அதிகரித்துள்ளது. நாட்டுக்காக பிரதமர் மோடி தலைமையில் நிறைய செய்யப்பட்டுள்ளது." என்று புதின் கூறியுள்ளார். நாட்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், மானியங்கள் வெட்டு, எரிபொருள் விலையுயர்வு, உபா சட்டம், பாலியல் பலாத்கார சம்பவங்கள், பாலியல் பலாத்கார குற்றவாளிகள் விடுதலை ஆகிய பிரச்னைகள் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது புதின் கூறியுள்ள கருத்து அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதின்
முன்னதாக செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றிருந்த பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து தனது கவலையை அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த புதின், இந்த மோதல் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு தனக்கு தெரியும் என்றும், தங்களது கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறியிருந்தார். மேலும், விரைவில் இந்த மோல் முடிவுக்க வரும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications