ஸ்கூல் லீவு இல்லை: ஒபாமாவுடன் மகள்கள் இந்தியா வரவில்லை
வாஷிங்கடன்: பள்ளியில் விடுமுறை இல்லாததால் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அவரது மகள்கள் இந்தியா வரவில்லை.
டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வருகிறார். அவருடன் அவரது மனைவி மிஷலும் வருகிறார். ஆனால் அவர்களின் மகள்கள் மாலியா மற்றும் சாஷா இந்தியா வரவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் விடுமுறை இல்லாததால் மாலியாவும், சாஷாவும் இந்தியா வரவில்லையாம். கடந்த ஆண்டு அவர்கள் இருவரும் தங்களின் தாயுடன் சீனா சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரான பென் ரோட்ஸ் கூறுகையில்,
மாலியா, சாஷாவுக்கு பள்ளி தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதனால் அவர்கள் பள்ளி விடுமுறையின்போது தான் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இந்தியாவில் மிஷல் தனியாக எங்கும் செல்ல திட்டமிடவில்லை என்றார்.