சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவிற்கு நிமோனியா: மருத்துவமனையில் அனுமதி
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தந்தை என்றும் போற்றப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
91 வயதான லீ நீண்ட நாட்களாகவே இதயக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த உறைதல் ஏற்பட்டு கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நிமோனியா காய்ச்சல் காரணமாக லீ குவான் யூ சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், சில நாட்கள் வரை மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை குறித்த பிற விவரம் வெளியிடப்படவில்லை.
சிங்கப்பூர் பிரதமரும் அவரது மகனும், சனிக்கிழமையன்று மருத்துவமனைக்கு சென்று லீயின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். விரைவில் உடல்நலம் பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கடந்த 1923 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவரான லீ குவான் இயூ, நவீன சிங்கப்பூரின் சிற்பி என்றும், சிங்கப்பூரின் தந்தை என்றும் அந்நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறார்.
இருபதாம் நூற்றாண்டின் சுதந்திர சிங்கப்பூரின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவர் லீ குவான் யூ. தனது தோழர்களுடன் சேர்ந்து தொடங்கிய மக்கள் செயல் கட்சியின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு சுதந்திர சிங்கப்பூர் உருவாவதற்கு ஒரு காரணியாகவும் இருந்த அவர், சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். 31 ஆண்டுகள் திறமையான ஆட்சியால் சிங்கப்பூரை பொருளாதார வளம்மிக்க நாடாக மாற்றினார்.
லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் பதவியில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 50வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தன் நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டுள்ளார் லீ.