3ம் உலகப்போருக்கு முன்னதாக மனிதர்கள் செவ்வாயில் குடிபுக வேண்டும்: எலோன் மஸ்க்
பூமியிலுள்ள உயிரினங்கள் மொத்தமும் அழிந்துவிடுமுன் செவ்வாய் கிரகத்தில் குடிபெயர்ந்துவிட வேண்டும் என எலோன் மஸ்க் கூறியுள்ளார்.
நியூயார்க்: மூன்றாம் உலகப்போர் மூண்டு, பூமியிலுள்ள உயிரினங்கள் முற்றாகத் துடைத்தொழிக்கப்படுமுன் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடிபுக வேண்டும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி துறையில் முக்கிய பணிகளை செய்து வருகிறது. இந்த தனியார் நிறுவனம் 'எலோன் மஸ்க்' என்ற கோடிஸ்வரருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.
நாசாவை விட பெரியது
நாசாவை விட இந்த நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய நிறுவனம் ஆகும். சமீபத்தில் தான் இவர் செவ்வாய்கிரகத்துக்கு கார் ஒன்றை அனுப்பினார். இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் முன்னோடிச் சோதனைகள் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் தொடங்கலாம் என அதிரடியாக அறிவித்துள்ளார் எலோன்.
3வது போர் வருவதற்குள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் எலோன். அப்போது அவர், "அடுத்த உலகப் போர் வெடிப்பதற்கு முன் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்குக் குடியேறுவது அவசியம்.
இல்லாவிட்டால் அழிந்து விடுவோம்
உலகளாவிய அணு ஆயுதப் போர் மூண்டு, பூமியிலுள்ள உயிரினங்கள் முற்றாகத் துடைத்தொழிக்கப்படுமுன் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடிபுக வேண்டும். அப்போது தான் மீண்டும் தேவை ஏற்படும் போது பூமியில் மனித நாகரீகத்தை உண்டாக்க முடியும்" என அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரக மக்கள்
செவ்வாய் கிரகத்தில் குடியிருப்பு ஒன்றைத் தோற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார் எலோன் என்பது குறிப்பிடத்தக்கது. பூமியைப் போல அல்லாமல் செவ்வாய் கிரகத்தில் வசிக்கவிருக்கும் மக்களுக்கு அதிக உரிமைகள் இருக்கும் என அவர் கூறி வருகிறார்.