இந்து-புத்த அமைதி மண்டலம்: ஆர்எஸ்எஸ்சுக்கு இலங்கையின் பொதுபல சேனா அழைப்பு
கொழும்பு: இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் வகையில் தெற்காசியாவில் இந்து-புத்த அமைதி மண்டலத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கையின் புத்தமத கடும்போக்குவாதி அமைப்பான பொது பல சேனா தெரிவித்துள்ளது.
புத்த மதத்தின் கடும்போக்குவாதிகளான பொது பல சேனா அமைப்பினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் நடுவே அவ்வப்போது இலங்கையில் மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் அந்த அமைப்பின் தலைமை பிட்சு ஞானசார தேரர் கூறியதாவது: தெற்காசிய பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் பெருகி வருவதால் பல நாடுகள் அச்சுறுத்தலில் சிக்கியுள்ளன. இதை தடுக்க இந்து-புத்த அமைதி மண்டலத்தை உருவாக்க பொது பல சேனா விரும்புகிறது. இதுகுறித்து இந்தியாவின் இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் பொது பல சேனா, இதே நோக்கத்திற்காக, மியான்மர் நாட்டிலுள்ள 969 அமைப்புகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. இந்நிலையில் இந்தியாவிலும் அதன் கூட்டணியை தொடர விரும்பியுள்ளது.
ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி ராம்மாதவ் இதுகுறித்து கருத்து கூறுகையில், பொது பல சேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எங்களுக்கு எந்த வேண்டுகோளும் வரவில்லை. பொது பல சேனாவின் இந்த திட்டம் குறித்து ஆர்எஸ்எஸ்சுக்கு எதுவும் தெரியாது. ஆர்எஸ்எஸ்சை பொறுத்தளவில் சர்வதேச அளவிலான விவகாரங்களில் அது தலையிடுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.