இதென்ன மனுஷனா? அச்சுறுத்தும் வினோத உயிரினங்கள்.. ஆஸ்திரேலிய கடல் உள்ளே பார்த்தால்.. ஷாக்
கான்பெரா: ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் ஆய்வாளர்கள் சிலர் வித்தியாசமான உயிரினங்களை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்னர் இப்படியான உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லையென்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
உலகில் உயிரினங்கள் முதலில் கடலில்தான் உருவானதாக ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினங்கள் இந்த கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்களின் குணநலன்கள், வாழ்க்கை முறை, இனப்பெருக்க செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
புதையல்
கடல் என்பது புதையல் போன்றது. பல்வேறு நேரங்களில் பல்வேறு உயிரினங்கள் தொடர்ந்து இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதால்தான் கடலை புதையல் என்று கூறுகின்றனர். இந்நிலையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் 'பெர்த்' தீவு பகுதியில் இந்த புதிய உயிரினங்களை மியூசியம்ஸ் விக்டோரியா ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 467,054 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட இந்த பகுதியில்தான் மேற்குறிப்பிட்ட அதிசய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்களே இல்லாத விலாங்கு மீன், வௌவால் போன்ற மீன்கள், கூர்மையான பற்களை கொண்ட பல்லி மீன்கள் ஆகிய இந்த புதிய கண்டுபிடிப்பில் அடக்கம்.
தீவுகள்
இந்த பகுதி அதிக அளவில் பவளப்பாறைகளும், பனை மரங்களையும் கொண்ட பகுதியாகும். இப்படியாக இங்கு 27 தீவுகள் இருக்கின்றன. இந்த தீவிலிருந்து சுமார் 4.5 கி.மீ தொலைவில் முதலில் மேற்குறிப்பிட்ட உயிரினங்களை ஆய்வாளர்கள் பார்த்திருக்கிறார்கள். இதனையடுத்து இந்த உயிரினங்களை பார்த்த பகுதியில் ஆழ்கடலில் ஆய்வு மேற்கொள்கையில் மேலும் சில புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த ஆய்வில் அடையாளம் காணப்பட்ட பல்லி மீனுக்கு விரை பையும் இருக்கிறது. கருப்பையும் இருக்கிறது. அதாவது இந்த வகை மீன்கள் இனச்சேர்க்கைக்கு மற்றொரு மீனை அணுக வேண்டிய அவசியமில்லை.
புதிய மீன்கள்
மற்றொரு மீனில் கண்கள் மிக வித்தியாசமாக இருந்திருக்கிறது. இது ஏறத்தாழ மனிதர்களின் கண்களை போலவே இருக்கிறது. இந்த வகை மீன்கள் தரையில் முழுவதுமாக படுத்துக்கொண்டு எதிரே வரும் இரையை வேட்டையாடுமாம். எனவே இதற்கு ஏற்றார்போல இம்மீனின் கண்கள் அமைந்திருக்கின்றன. அதேபோல வௌவால் மீன் பார்ப்பதற்கு வௌவால் எப்படி மரம் ஏறுமோ அதேபோலவே ஆழ்கடலில் நகர்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த மீன்கள் ஆழ்கடலில் மட்டுமே வாழ்வதால் மனிதர்கள் உருவாவதற்கு முன்னிருந்தே இவைகள் தோன்றியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பரிணாம வளர்ச்சி
ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கும் என்பது இயற்பியல் விதி. ஆனாலும் இந்த அழுத்தத்திலும் உயிர்வாழும் வகையில் இம்மீன்கள் பரிணாமமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் கண்கள், பற்கள் போன்றவையும் வித்தியாசமாக இருக்கின்றன. இந்த புதிய உயிரினங்களில் சில வகை உயிரினங்கள் ஒளியை கடத்தும் தன்மையை பெற்றிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, உலகில் பல உயிரினங்களின் உடல்களில் ஒளி புகாது. ஆனால் இந்த மீன்களை எடுத்து பார்த்தால் அந்த பக்கம் இருப்பது நமக்கு தெரியும். இங்கிருந்து லைட் அடித்தால் அந்த பக்கம் ஒளி பாயும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.