பிரேசிலில் மது அருந்தும் போட்டி: 1 நிமிடத்தில் 25 ஷாட் வோட்கா குடித்த மாணவர் பலி
பாவ்ரு: பிரேசில் நாட்டு பல்கலைக்கழகத்தில் நடந்த பார்ட்டியின்போது மது அருந்தும் போட்டியில் பங்கேற்ற மாணவர் பலியானார்.
பிரேசில் நாட்டில் உள்ள பாவ்ரு நகரில் உள்ளது ஜூலியோ டி மெஸ்கிடா பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ஹம்பர்டோ மவ்ரா பொன்சேகா(23). பல்கலைக்கழகத்தில் பார்ட்டி ஒன்று நடந்தது. அப்போது மது அருந்தும் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் ஹம்பர்டோ கலந்து கொண்டார்.
60 நொடிக்குள் 25 ஷாட் வோட்காவை யார் குடிக்கிறார்களோ அவரே வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போட்டியில் கலந்து கொண்ட ஹம்பர்டோ உள்ளிட்டவர்கள் வோட்காவை குடிக்க ஆரம்பித்தனர். வேக வேகமாக வோட்கா குடித்தவர்களில் 7 பேர் மயங்கி விழுந்தனர்.
மயங்கிய அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஹம்பர்டோ வழியிலேயே பலியானார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விதிகளை மீறி மது அருந்தும் போட்டி நடத்திய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
இளம் மாணவரின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பல்கலைக்கழகத்தில் மது அருந்துதல் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை மாணவர்களுக்கு நினைவு கூற விரும்புகிறோம் என்றார்.