சாலமன் தீவுகளின் 5 தீவுகளை கடல் காவு கொண்டது!
சாமலன் தீவுகள்: பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவுகள் நாட்டுக்குச் சொந்தமான 5 தீவுகள் கடலில் மூழ்கியுள்ளன. கடல் நீர் மட்டம் உயர்ந்ததால் இந்தத் தீவுகள் மூழ்கி விட்டன. மேலும் 6 தீவுகள் மோசமான நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் அரிப்பு, கடல் நீர் மட்ட உயர்வு ஆகியவையே இந்த தீவுகள் மூழ்கக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிப்பும் புவி வெப்பமே கடல் நீர் மட்டம் உயர முக்கியக் காரணம்.
காகதீனா, காலே, ரபிடா, ரெஹனா, ஜோலிஸ் ஆகியவையே கடலில் மூழ்கிப் போய் விட்ட தீவுகளாகும்.
ஆதி காலத்தில் கடலில் பல நாடுகள், நகரங்கள் மூழ்கி விட்டதாக படித்துள்ளோம், கதைகளைக் கேட்டுள்ளோம். ஆனால் நம் கண் முன்பாக இப்போது தீவுகள் மூழ்க ஆரம்பித்துள்ளது பூமியின் எதிர்காலம் குறித்த கவலையை அதிகரிப்பதாக உள்ளது.
சாலமன் தீவுகளில் கடலில் மூழ்கிய தீவுகள், பவளப் பாறை தீவுகள் ஆகும். இவற்றில் யாரும் வசிக்கவில்லை. மாறாக மீனவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இந்த தீவுகளில் மொத்தமாக 10 வீடுகளே இருந்தன. அவையும் கூட ஓய்வெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. கடந்த 2011 முதல் இவை கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்க ஆரம்பித்தன. 2014 இறுதியில் முழுவதுமாக மூழ்கி விட்டன.
வடக்கு சாலமன் தீவுகளைச் சுற்றியுள்ள 11 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 1935ம் ஆண்டிலிருந்தே சாலமன் தீவு பகுதியில் கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கடலில் மூழ்கியுள்ள தீவுகள் சிறியவைதான். மொத்தமே 12 ஏக்கர் பரப்பளவிலானதுதான். எப்போதாவது இங்கு மீனவர்கள் வந்து போவார்கள்.
சாலமன் தீவுகள் நாட்டில் நூற்றுக்கணக்கான தீவுகள் உள்ளன. இங்கு ஸ்கூபா டைவிங் மிகப் பிரபலமானது. அமெரிக்கர்கள் ஒரு காலத்தில் இந்த தீவுகளை தங்களது போர்த் தளளமாக பயன்படுத்தினர். சாலமன் தீவுகளின் தலைநகர் ஹோனியாரா. இதற்கு அருகில் உள்ள பெரிய நாடுகள் ஆஸ்திரேலியா, பபுவா நியூ கினி, வனாட்டு ஆகியவை.