மலேசியாவின் 16-வது புதிய மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்பு
கோலாலம்பூர்: மலேசியாவின் 16-வது புதிய மாமன்னராக சுல்தான் அப்துல்லா நேற்று பதவியேற்றார். கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் பாரம்பரிய சடங்குகளுடன் சுல்தான் அப்துல்லா அரியணையில் அமர்ந்தார்.
மலேசியாவில் மன்னராட்சி முறை இன்னமும் நடைமுறையில் இருந்து வருகிறது. மலேசியாவில் பெர்லிஸ், கெடா (கடாரம்), பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பாகாங், திரெங்கானு, கிளந்தான் ஆகிய 9 மாநிலங்கள் உள்ளன.

இந்த 9 மாநிலங்களுக்கும் மன்னர்கள் உள்ளனர். 9 மாநில மன்னர்களும் ஒன்றுகூடி சுழற்சி முறையில் தங்களுக்கான மாமன்னரை (அகாங்) தேர்வு செய்வது வழக்கம். இம் மாமன்னர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள்.
இதன்படி 2016-ம் ஆண்டு கிளந்தான் மாநில சுல்தான் ஐந்தாம் முகம்மது மாமன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2 ஆண்டுகள் மட்டுமே மாமன்னர் பதவியில் இருந்த ஐந்தாம் முகமது திடீரென கடந்த ஜனவரி மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.
அவரது திடீர் பதவி விலகல் பெரும் சர்ச்சையானது. பின்னர்தான் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த மாமன்னருக்கும் ரஷ்யாவின் மாஜி அழகிக்கும் 2018-ல் காதல் உருவாகி திருமணத்தில் முடிந்தது அம்பலமானது.
பதவி விலகிய மாமன்னருக்கு ஏற்கனவே 22 வயதில் ஒரு மனைவியும் 2 மாத ஆண் குழந்தையும் இருந்தது. ரஷ்யா அழகியை அவர் திருமணம் செய்ததால் கடந்த மாதம் இளம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டாராம்.
இதையடுத்தே புதிய மாமன்னரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. பாகாங் மாநிலத்தின் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் புதிய மாமன்னராக அதாவது மலேசியாவின் 16-வது அகாங்காக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய மாமன்னரின் பதவியேற்பு நிகழ்ச்சி கோலாலம்பூரின் இஸ்தான் நெகாராவில் நேற்று நடைபெற்றது. இந்த பதவி ஏற்பு நிகழ்வில் புருனே சுல்தான் ஹசனல் போல்கியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமன்னராக பதவி ஏற்ற சுல்தான் அப்துல்லா தங்கத்தினால் நெய்யப்பட்ட மஸ்காட் உடை அணிந்திருந்தார். பாரம்பரிய சடங்குகளுடன் அரியணை ஏறிய சுல்தான் அப்துல்லா, அரண்மனைக்கு வெளியே அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications