ஈராக்கின் மேற்கு எல்லை முழுவதுமாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமாகியது!!
பாக்தாத்: ஈராக்கின் மேற்கு எல்லைப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய 4 முக்கிய நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் வசமாக்கினர். இதன் மூலம் ஜோர்டான் மற்றும் சிரியாவிலிருந்து ஆயுதங்களை கொண்டுவரும் விநியோகப் பாதையில் தீவிர்வாதிகளுக்கு இருந்து வந்த முட்டுக்கட்டை அகன்றுள்ளது.
ஈராக்கில் பிரதமர் நூரி அல் மாலிக்கியின் தலைமையிலான ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுதப் படை யுத்தத்தை நடத்தி வருகிறது.
ஈராக்கின் வடக்கு நகரங்களை கைப்பற்றிய நிலையில் தலைநகர் பாக்தாத் மற்றும் மேற்கு நகரங்களில் அரச படைகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கு ஈராக்கில் மிகப் பெரும் மோதல் நடைபெற்று வருகிறது.
இதில் அன்பார் மாகாணத்தில் உள்ள காயிம், ரவா, அனா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்து தீவிரவாதிகள் வசமாகின. மேலும் ஜோர்டான் எல்லையில் அமைந்துள்ள ரூட்பா நகரத்தையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளது.
யூப்ரட்டீஸ் நதிக்கரையில் உள்ள ரவா மற்றும் அனா நகரை தீவிரவாதிகள் வசமாக்கிய நிலையில் ஹதிதா நகரில் உள்ள பெரிய அணையை நோக்கி செல்கின்றனர் தீவிரவாதிகள்.
இந்த அணையை தீவிரவாதிகள் தங்களது வசமாக்கினால் ஈராக்கின் மின் வினியோக அமைப்பில் கடுமையான பாதிப்பு ஏற்படும். இதனால் ஈராக் அரசு படைகள் கடும் மோதலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.