விமானத்தில் குழந்தை பெற்ற பெண் மீது வழக்கு தொடரும் ஏர்லைன்ஸ் நிறுவனம்
தைபே: தைவானில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்ற சீன ஏர்லைன்ஸ் விமானத்தில் பிரசவித்த பெண்ணால் ஏற்பட்ட கூடுதல் செலவை வசூலிக்க அவர் மீது வழக்கு தொடரப்பட உள்ளது.
சீன ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தைவான் தலைநகர் தைபேவில் இருந்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கிளம்பியது. விமானத்தில் இருந்த பெண் ஒருவருக்கு திடீர் என பிரசவ வலி ஏற்பட்டது. அவர் விமானத்திலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.
இதையடுத்து தாயையும், சேயையும் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக விமானம் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு பதில் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஆங்கரேஜ் நகருக்கு திருப்பி விடப்பட்டு அங்கு தரையிறக்கப்பட்டது.
விமானம் திருப்பிவிடப்பட்டதால் சீன ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.22 லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கூடுதல் செலவுக்கான தொகையை வசூலிக்க அந்த பெண் மீது வழக்கு தொடரப்பட உள்ளது.
36 வார கர்ப்பிணியாக இருந்த அந்த பெண் தான் எத்தனை மாதம் கர்ப்பம் என்பதை தெரிவிக்காமல் பயணம் செய்துள்ளார். அமெரிக்காவில் குழந்தையை பெற்றால் அது அந்நாட்டு குடியுரிமையை பெறும் என அங்கு கிளம்பியுள்ளார்.
சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார். ஆனால் அவரின் குழந்தை அமெரிக்காவில் உள்ள அவரின் தோழியின் கவனிப்பில் விடப்பட்டுள்ளது.