தைவான் ரயில் விபத்து.. கடைசி நிமிட காட்சிகள் வெளியீடு
தைபே: சீனாவில் உள்ள தன்னாட்சி பகுதியான தைவானில் கடந்த வாரம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தைவானில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரயில் ஒன்று சுரங்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயிலில் 494 பயணிகள் இருந்தனர்.
ரயில் தண்டவாளத்தை கடப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, சுரங்கத்திற்கு வெளியே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, மலையில் இருந்து சரிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.
லாரி விபத்து
இந்நிலையில் தண்டவாளத்தில் விழுந்துகிடந்த கனரக வாகனத்தின் மீது, சுரங்கம் வழி வந்த பயணிகள் ரயில் பயங்கர விபத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் லாரி விழுந்து கிடப்பதை கடைசி நிமிடத்தில் பார்த்த ரயில் ஓட்டுநரால் ரயிலை நிறுத்த முடியவில்லை.
50 பேர் பலி
தைவான் வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். தற்போது அங்கு சிதைந்து கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
லாரியில் மோதியவை
இதுவரை மூன்று ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு பெட்டிகளை அகற்றவேண்டியுள்ளது.அந்த இரண்டு பெட்டிகளும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளன. அவை கனரக வாகனத்தின் மீது மோதியவை ஆகும்.
|
பார்க்க முடியவில்லை
இந்நிலையில் ரயில் விபத்து தொடர்பான கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. லாரி ஓட்டுநர் பிரேக்கை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தண்டவாளத்தில் விழுந்துகிடந்த வாகனத்தைக் கடைசி நேரத்தில்தான் ரயில் ஓட்டுநரால் பார்க்க முடிந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.