ஆப்கானில் தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்- 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டினர் தங்கும் விடுதியில் வெடிபொருட்கள் நிரம்பிய வாகனம் மூலம் தலிபான்கள் இன்று தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினர். இதையடுத்து அங்கு தலிபான்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அரசாங்கத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் தலிபான்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். காபூலில் இன்று காலை வெளிநாட்டினர் தங்கியிருந்த விடுதி மீது தற்கொலைப் படை தாக்குதலை தலிபான்கள் நடத்தினர்.
வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை ஓட்டிவந்த தற்கொலைப் படை தீவிரவாதி இத்தாக்குதலை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு பதுங்கியிருந்த தலிபான்களும் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
இதனையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 2 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 15 ஆண்டுகளில் காபூலில் நிகழ்த்தப்பட்ட மிக பயங்கரமான தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.