புகலிட கோரிக்கையை ஏற்க ஆஸி. மறுப்பு.. தீக்குளித்தார் ஈழத் தமிழர்.. கவலைக்கிடம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த ஈழத் தமிழ் வாலிபரின் விணணப்பம் நிராகரிக்கப்பட்டதால் அவர் தீக்குளித்து விட்டார்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிட்னியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபருக்கு வயது 20களில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பெயர் ஜனார்த்தனன். கடந்த 18 மாதமாக தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தார்.
அவர் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்தார். அது நிராகரிக்கப்பட்டதாக 2 நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய குடியுரிமைத் துறையினர் கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர். இதனால் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தீக்குளித்து விட்டார். உடல் கருகிய நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.