விமானத்தின் சரக்குப்பகுதியில் ஒளிந்தபடி சீனாவில் இருந்து துபாய் சென்ற சிறுவன்: ஏன் தெரியுமா?
துபாய்: சீனாவை சேர்ந்த 16 வயது சிறுவன் அங்கிருந்து துபாய்க்கு கிளம்பிய எமிரேட்ஸ் விமானத்தின் கார்கோ(சரக்கு) பகுதியில் மறைந்து பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்தவர் ஜூ(16). துபாயில் பிச்சை எடுத்தால் தினமும் கை நிறைய பணம் கிடைக்கும் என்று அவர் கேள்விப்பட்டுள்ளார். இதையடுத்து துபாய்க்கு சென்று பிச்சை எடுக்க முடிவு செய்தார். ஆனால் துபாய்க்கு செல்லும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை.
இதையடுத்து அவர் கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து துபாய்க்கு சென்ற எமிரேட்ஸ் விமானத்தின் சரக்குப் பகுதியில் ஒளிந்து கொண்டார்.
விமானம் துபாயை அடைந்த பிறகு தான் சரக்கோடு சரக்காக சேர்ந்து சிறுவன் பயணம் செய்தது தெரிய வந்தது.
அதன் பிறகு சிறுவன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் துபாய் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவிக்க துபாய் போலீஸ் மற்றும் சீன தூதரக அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். ஜூ ஷாங்காய் விமான நிலையத்தின் வேலியை தாண்டி குதித்து வந்து பாதுகாவலர்கள் பார்க்காத நேரத்தில் சரக்கு பகுதியில் ஏறியுள்ளார் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.