பழிக்கு பழி வாங்கிட்டோம்.. பாகிஸ்தான் பெஷாவர் மசூதி தாக்குதலுக்கு காரணம் சொன்ன தெஹ்ரிக்-இ-தாலிபான்
பெஷாவர் மசூதியில் தற்கொலை தாக்குதலை நடத்தியது எங்கள் அமைப்பை சேர்ந்தவர்தான். பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில் எங்கள் கமாண்டர் மவுலானா நூருல் அமீனை கொன்றதற்கு பழிக்கு பழியாகவே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என்று தெஹ்ரிக் - இ - தலிபான் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும், இந்த மசூதி தாக்குதல் தங்கள் தலைவனை கொன்றதற்கு பழிக்கு பழியாக நடத்தப்பட்டது என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் இனி தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தலிபான்கள் என அறியப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்குமாறு ராணுவத்துக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு - 28 பேர் பலி, 150 பேர் படுகாயம்! தலிபான்கள் வெறியாட்டம்
அதிர்ந்த பாகிஸ்தான்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் புகழ்பெற்ற மசூதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான இஸ்லாமியர்கள் வந்து தொழுகை நடத்திச் செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் அந்த மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
61 பேர் பலியான பரிதாபம்
அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்தவர் தூக்கி வீசப்பட்டனர். குண்டுவெடிப்பின் தாக்கத்தில் அந்த மசூதியின் ஒரு பகுதி அப்படியே இடிந்து அங்கிருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த கோர சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸாரும், ராணுவத்தினரும் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 28 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். படுகாயமடைந்த நிலையில் 150 பேர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் பலர் அடுத்தடுத்து சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது.
தற்கொலை தாக்குதல்
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவமும், போலீஸாரும் இணைந்து நடத்திய விசாரணையில், மசூதியில் தொழுகை நடத்தியவர்களில் முன் வரிசையில் இருந்த ஒருவர், திடீரென தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தது தெரியவந்தது. மேலும், இந்த தாக்குதலை பாகிஸ்தான் தலிபான்கள் என அழைக்கப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் தீவிரவாதிகளே நடத்தியிருக்க வேண்டும் என அந்நாட்டு உளவுத்துறை தெரிவித்திருந்தது.
பழிக்குப் பழி தாக்குதல்
இந்நிலையில், இந்த பயங்கர தாக்குதலை நிகழ்த்தியது தாங்கள்தான் என தெஹ்ரிக் - இ - தலிபான் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "பெஷாவர் மசூதியில் தற்கொலை தாக்குதலை நடத்தியது எங்கள் அமைப்பை சேர்ந்தவர்தான். பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில் எங்கள் கமாண்டர் மவுலானா நூருல் அமீனை கொன்றதற்கு பழிக்கு பழியாகவே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இன்னும் எங்கள் தாக்குதல் தொடரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தலிபான்கள் என அறியப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்குமாறு ராணுவத்துக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.