விமானம் மாயமான அன்று ஏதோ பயங்கரமாக வெடித்த சத்தம் கேட்டோம்: மலேசிய கிராம மக்கள்
கோலாலம்பூர்: மலேசிய விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சில மணிநேரத்தில் மராங் நகரில் ஏதோ ஒன்று வெடிக்கும் சத்தம் பயங்கரமாக கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தை 26 நாடுகள் தேடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மலேசியாவில் உள்ள டெரங்கானு மாநிலத்தில் உள்ள மராங் நகரில் மாயமான விமானம் கிளம்பிய சில மணிநேரங்களில் ஏதோ வெடிக்கும் சத்தம் பயங்கரமாக கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டதாக மராங் மக்கள் தெரிவித்துள்ளது பற்றி தங்களுக்கு தகவல் வந்துள்ளது என்று டெரங்கானு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் புகிட் அமான் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், மராங்கில் இருந்து தங்களுக்கு நேற்று தான் தகவல் கிடைத்தது என்றும் டெரங்கானு போலீஸ் அதிகாரி டத்துக் ஜாம்ஷா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
8 பேர் தான் வெடிக்கும் சத்தத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்த பொருள் வெடிப்பதையும் பார்க்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மராங்கில் உள்ள கம்புங் பன்டாய் செபராங்கில் வசிக்கும் 8 பேர் பயங்கர வெடிக்கும் சத்தத்தை கேட்டதாக நேற்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தாங்கள் மராங் கடற்கரையில் உட்கார்ந்திருந்தபோது அதிகாலை 1.20 மணிக்கு வெடிக்கும் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.