சிலருக்கு வயிறு எரியுது! இந்தியாவின் வளர்ச்சி பொறுக்க முடியல! பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் சுளீர் பதில்
நிக்கோஸியா: "தீவிரவாதத்தைப் பயன்படுத்தி இந்தியாவை ஒருகாலும் பணிய வைக்க முடியாது" என்று பாகிஸ்தானைக் குறிப்பிட்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளுடன் சுமுகமாக உறவைப் பேணவே இந்தியா விரும்புவதாகக் கூறிய ஜெய்சங்கர், அதற்காகத் தீவிரவாதத்தைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் கூறினார்.
மேலும், சீனாவுடனான இந்தியாவின் உறவு சீராக இல்லை என்றும், எல்லை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ளாத போக்கைக் கடைப்பிடிப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.
2022 இன் கடைசி வானிலை ரிப்போர்ட்.. இன்று மழைக்கு வாய்ப்பு! ஜனவரி 3 முதல் அடுத்த ரவுண்டு ஸ்டார்ட்
இந்தியா - பாகிஸ்தான் மோதல் போக்கு
சமீபகாலமாகவே, இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக ஐநா உள்ளிட்ட சர்வதேச தளங்களில் காஷ்மீர் விவகாரத்தைப் பாகிஸ்தான் எழுப்பியது இந்தியாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அண்மையில் நடந்த ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானைத் தீவிரவாத நாடு என்றும், தீவிரவாதத்தால் திவாலாகி நிற்கும் நாடு எனவும் ஜெய்சங்கர் பகிரங்கமாகச் சாடினார். இது, பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.
"இந்தியாவைச் சீண்டும் அண்டை நாடுகள்"
இந்நிலையில், சைப்ரஸ் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர், அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: இன்றைக்கு இந்தியா எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறதோ அதே அளவுக்கான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலக வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா அசுர வளர்ச்சி பெற்றிருப்பதை சில அண்டை நாடுகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவை ஏதேனும் ஒரு வகையில் இந்தியாவைச் சீண்டிக் கொண்டே இருக்கின்றன.
"சுமுகமான உறவையே விரும்புகிறோம், ஆனால்.."
இந்தியாவைச் சீண்டினால் இப்போதெல்லாம் அதற்கு இரட்டிப்பாகப் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அண்டை நாடுகளுடன் சமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்காகத் தீவிரவாதத்தைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு அண்டை நாடு (பாகிஸ்தான்) இந்தியாவைத் தீவிரவாதம் மூலமாக அச்சுறுத்தி விடலாம் என நினைத்தது. ஆனால், தீவிரவாதத்தால் இந்தியாவை ஒருகாலும் அடிபணிய வைக்க முடியாது என்பதை அவர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.
சீனா எல்லை விவகாரம்
இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக சுமுகமான உறவு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா காலத்தில் இந்த பிரச்சினை இன்னும் அதிகமானது. எல்லைக் கோட்டுப் பகுதியை மாற்றியமைக்க இந்தியா அனுமதிக்காததே, சீனா உடனான பிரச்சினைக்குக் காரணம். எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்திய மண்ணில் அந்நியர்கள் கால்பட்டு விடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.