விஷப்பாம்புகளின் வாயைக் கடித்து வித்தை... தாய்லாந்து கலைஞரின் வினோத விளையாட்டு!
பாங்காக்: பொதுவாக பாம்பு மற்றவர்களைக் கடிக்கும் எனத் தான் கேள்வி பட்டிருப்போம், ஆனால், பாம்புகளையே கடித்து வித்தை காட்டுகிறார் தாய்லாந்து கலைஞர் ஒருவர்.

‘பாம்பு புத்துக்குள்ள எப்டி கையை விட்டீங்க, பாம்பு கடிக்கலையா..?' என படையப்பா படத்தில் பிரபலமான வசனம் ஒன்று வரும். அந்தளவிற்கு பாம்பென்றால் படையும் நடுங்கும் மனோநிலையைக் கொண்டவர்கள் நமது மக்கள்.
அதற்கு முக்கியக் காரணம் ஒரே கடியில் உயிரைப் பறிக்கும் விஷத்தன்மை கொண்டவைகள் பாம்புகள் என்பது தான். ஆனால், தாய்லாந்து பாம்பாட்டி ஒருவர் விஷ பாம்புகளை வைத்து விதவிதமான விளையாட்டுகளைச் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறார்.
பாம்பு வித்தை...
பிரபல சுற்றுலாத் தளங்களில் ஒன்றான தாய்லாந்தின் உல்லாச நகரமான பட்டயாவில் தான் இந்தக் கலைஞர் பாம்புகளை வைத்து வித்தை செய்து வருகிறார்.
சிறை பிடிக்கப் படும் பாம்பு...
மஞ்சளும், கறுப்பும் கலந்த நிறத்தில் தரையில் ஊர்ந்து ஓடும் பயங்கரமான விஷப்பாம்பை, மெல்ல குனிந்து மண்டியிட்டு, தனது வாயால் கவ்வி, அது தனது தலையை சுற்றிப் பின்னிக் கொள்வதற்குள், பாம்பின் தலையை தனது பல்லால் கடித்து, சில நிமிடங்கள் வரை இவர் சிறைபடுத்தி வைக்கிறார்.
பறவைகள் ஸ்டைலில்...
அதோடு விடாமல், கொடிய விஷம் கொண்ட கருநாகப்பாம்பின் வாயுடன் தனது உதடுகளை பொருத்தி, தனது வாயில் வைத்திருக்கும் உணவை ஊட்டி விட்டு பார்வையாளர்களை மிரள வைக்கிறார் இவர்.
பார்வையாளர் கருத்து...
இவரது வித்தையை காண வந்த பார்வையாளர் ஒருவர், ‘நான் இதைப்போல் எத்தனையோ பாம்பாட்டிகளை பார்த்து விட்டேன். அவர்களது உயிர் பாம்புக் கடியில் தான் போய் உள்ளது' என கருத்துத் தெரிவித்துள்ளார்.
அருகிலேயே மருத்துவமனை...
இவர் வித்தை காட்டி வரும் இடத்திற்கு அருகிலேயே பாம்புக் கடிக்கென அதிநவீன சிகிச்சையளிக்கும் தாய்லாந்தின் சிறப்பு மருத்துவமனையான 'ரெட் கிராஸ் இன்ஸ்டிட்டியூட்' உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications