நடுக்கடலில் விழுந்த நபர்.. 18 மணி நேரம் நடந்த திக்திக் போராட்டம்.. கடவுளாக வந்த பந்து! அதிசய சம்பவம்
ஸ்கோப்ஜே: வடக்கு மாசிடோனாவில் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்தபோது கடல் நீரோட்டத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட நபர் ஒருவர் 18 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 மணி நேரமாக அந்த நபர் குழந்தைகள் விளையாடும் கால்பந்தை பற்றிக்கொண்டு கடலில் தத்தளித்து உயிர்பிழைத்துள்ளார்.
கிரீஸின் கசாண்ட்ரா கடற்கரையில் 30 வயது மதிக்கத்தக்க இவான் மற்றும் அவரது நண்பர் என இருவரும் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கடல் நீரோட்டத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

கடல்
இதனால் கடலுக்குள் இருவரும் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் இவான் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கடலில் 18 மணி நேரமாக தான் ஒரு பொம்மை கால்பந்தை பற்றிக்கொண்டு தத்தளித்து வந்ததாக இவான் கூறியுள்ளார். ஆனால் அவரது நண்பரை தற்போதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடல் அலைகள்
கடலின் அலையில் சிக்கி பின்னர் நீரோட்டத்தில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் இயல்பானதாக இருக்கின்றன. கடற்கரையில் குளிக்கும் நமக்கு நீரோட்டம் என்றால் என்னவென்று சரியான புரிதல்கள் இருப்பதில்லை. பொதுவாக நீரோட்டம் தரைப்பரப்பில் இருந்து கடலில் 3 மீட்டா் அல்லது 5 மீட்டா் தூரத்தில் இருக்கும். அதன் வேகம் வினாடிக்கு இரண்டரை மீட்டா் என்ற அளவில் இருக்கும். நீரோட்டம் எப்போதும் வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும்.

காரணம்
இதற்கான காரணத்தை இன்னும் ஆய்வாளர்களால் கண்டறியப்பட முடியவில்லை. இந்த நீரோட்டங்களில் சிக்கினால், அதில் இருந்து நீச்சல் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் தப்புவது கஷ்டம். இதனாலேயே இந்த நீரோட்டங்களில் சிக்குவோரில் பெரும்பாலானோர் இறப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நீரோட்டத்தின் பாதையிலேயே சென்று பக்கவாட்டில் நீந்தும் பட்சத்தில் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கால் பந்து
இதுதான் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. இப்படியான சக்திவாய்ந்த நீரோட்டங்களில் சிக்கிய இவான் கால்பந்தை இறுக பற்றி இருந்திருக்கிறார். அதில் காற்று இல்லை. இருந்த போதிலும் நீரோட்டத்தில் மூழ்கிவிடாமல் மிதக்க இந்த பந்து பயன்பட்டுள்ளது. பின்னர் கடலோர காவல்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஆச்சர்யம்
இதில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய விசயம் எதுவெனில் இவான் உயிர் பிழைக்க பற்றிக்கொண்ட பந்தானது அந்த கடற்கரையிலிருந்து சுமார் 80 மைல்கள் தொலைவில் 10 நாட்களுக்கு முன்னர் தன்னுடைய குழந்தைகள் தொலைத்துவிட்டிருந்தனர். அந்த பந்துதான் இது என இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்மணி கூறியுள்ளார் என்பதுதான் அந்த ஆச்சரியமான விசயம்.












Click it and Unblock the Notifications