கிறிஸ்துமஸ்... செல்ல நாய்க்கு ரூ.5 லட்சம் பரிசு கொடுத்த லண்டன் பெண்
லண்டன்: கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி இங்கிலாந்து பெண் ஒருவர் தனது செல்ல நாய்க்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வழங்கி கவுரவித்துள்ளார்.
ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையையொட்டி நண்பர்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு மக்கள் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்விப்பர்.
இவர்களில் இருந்து சற்று வேறுபட்டு தன் செல்ல நாய்க்கு பரிசுகளை வழங்கி மகிழ்ந்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த எம்மா பட்டாராஷி என்ற பெண். இவர் பிரின்ஸ் என்ற பெயரில் சீன வகை நாய் ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார்.
தனது நாய் மீது கொண்ட அளவில்லாத பிரியத்தால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, அதற்கு கிறிஸ்துமஸ் தாத்தா உடை, முத்து, பவளம், மற்றும் மாணிக்க கற்களால் ஆன கழுத்துப்பட்டை, ஆபரணம், கிரீடம் மற்றும் அலங்கார உடைகள் என ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கிப் பரிசளித்துள்ளார்.
தனது செயல் குறித்து எம்மா கூறுகையில், "எனது பிரின்சுக்கு (நாய்க்கு) நான் ஒன்றும் பெரிய அளவில் பரிசளிக்கவில்லை. அவனும் எனது குடும்பத்தில் ஒருவன்தான். எனவே அவனுக்கு எனக்கு பிடித்த கிறிஸ்துமஸ் தாத்தா உடையும் வழங்கி இருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இங்கிலாந்தில் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு பரிசு பொருட்கள் வழங்க ரூ.3 ஆயிரம் வரை செலவிடப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் அதை மிஞ்சும் வகையில் தனது செல்ல நாய்க்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கி எம்மா சாதனை படைத்துள்ளார்.