மருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய்
இஸ்தான்புல்: துருக்கியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளருக்காக மருத்துவமனை வெளியிலேயே நாய் ஒன்று ஆறு நாட்கள் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகில் நாய்களைப் போல நன்றியுள்ள மற்றொரு ஜீவனைக் காண்பது அரிது. உயிரிழந்த உரிமையாளருக்காக கல்லறையில் காத்திருந்த நாய்களின் கதைகளை எல்லாம் நாம் படித்திருப்போம். அதேபோல ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தான் துருக்கி நாட்டிலும் தற்போது நடந்துள்ளது.
துருக்கி நாட்டில் டிராப்ஸன் நகரில் வசித்து வருபவர் சென்டூர்க். 68 வயதாகும் இவருக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் பதறிய இவரது செல்ல நாய் போன்குக், ஆம்புலன்ஸையே பின்தொடர்ந்து சென்றுள்ளது.
சென்டூர்க்கிற்கு மருத்துவமனையில் சுமார் ஆறு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த ஆறு நாட்களும் அவரது செல்ல நாய் போன்குக், மருத்துவமனை வெளியிலேயே காத்திருந்தது. மருத்துவமனை வெளியே காத்திருந்த நாயை, பல முறை சென்டூர்க்கின் மகள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த திரும்பத் திரும்ப தன் உரிமையாளரைத் தேடி மருத்துவமனைக்கே சென்றது அங்கிருந்தவர்களின் கண்களைக் கலங்கச் செய்தது.
மருத்துவமனைக்கு வரும் நபர்களுக்கு அந்த நாய் எவ்வித சொந்தரவும் அளிக்கவில்லை என்றும் மருத்துவமனைக்கு வரும் சிலர் அந்த நாயுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டனர் என்றும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், போன்குக்கிற்கு தேவையான உணவையும் மருத்துவமனை ஊழியர்களே வழங்கியுள்ளனர். அவற்றை உண்டுவிட்டு, மிக அமைதியாகத் தனது உரிமையாளருக்காக போன்குக் மருத்துவமனைக்கு வெளியிலேயே காத்திருந்தது.
only in turkiye 🥺🐶🥺
— the istanbulist (@istanbulism) January 19, 2021
a man was hospitalized in trabzon province of turkiye. and his dog waited his owner in front of the hospital for five days. some staff of the hospital took care of him while he was waiting. pic.twitter.com/tzk8a1bQa2
இறுதியாகச் சிகிச்சை முடிந்த பின், சில நாட்களுக்கு முன் சென்டூர்க் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்த்த சந்தோசத்தில் ஆர்ப்பரித்த போன்குக் உரிமையாளர் மீது துள்ளிக் குதித்து ஏறியது. சென்டூர்க்கை பார்க்கும் வரை போன்குக் மிகவும் சோகமாகவே இருந்ததாகவும் அவரை பார்த்தும் போன்குக் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.