ஜனநாயகத்தை வலியுறுத்தி ஹாங்காங்கில் லட்சக்கணக்கானோர் பிரம்மாண்ட பேரணி!
ஹாங்காங்: சீனாவின் ஆளுகையில் கீழ் இருக்கும் ஹாங்காங்கில் கூடுதல் ஜனநாயகத்தை வலியுறுத்தி லட்சக்கணக்கானோர் இன்று பிரம்மாண்ட பேரணியை நடத்தினர்.
இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு ஜூலை 1-ந் தேதியன்று சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. "ஒரே நாடு இரண்டு நிர்வாகங்கள்" என்ற கோட்பாட்டுடன் சீனாவின் ஒருபகுதியானது ஹாங்காங்.
ஆனால் இதை ஹாங்காங் மக்கள் முழுமையாக இன்னமும் ஏற்கவில்லை. ஆண்டுதோறும் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்ட ஜூலை 1-ந் தேதியன்று பல லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தங்களது சுதந்திர தாகத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.
2 லட்சம் பேர் பேரணி
கடந்த 10 ஆண்டுகளை விட இந்த முறை சுமார் 2 லட்சம் பேர் ஹாங்காங் வீதிகளில் திரண்டு ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுத்தனர். அத்துடன் நாட்டின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக யார் இருப்பது என்பதை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு தன்னிச்சையாக நடைபெற்று வருகிறது.
ஹாங்காகின் கோரிக்கை
தற்போது சீனா நாட்டைச் சேர்ந்தவர்தான் நிர்வாகியாக இருந்து வருகிறார். ஹாங்காங்கை சேர்ந்த ஒருவரே நிர்வாகியாக இருக்க வேண்டும் என்பது அந்த மக்களின் கோரிக்கை.
சீனா பிடிவாதம்
இதை சீனா தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது. 2017ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஹாங்காங் மக்கள் விரும்புகிற ஜனநாயக உரிமைகள் வழங்கப்படும் என்று சீனா உறுதி அளித்து வருகிறது.
அமெரிக்கா சார்பு
இந்த விவகாரத்தில் ஹாங்காங்கில் ஜனநாயகம் கோருவோர் அமெரிக்கா பக்கம் சாய்ந்தும் வருகின்றனர். இதனால் சீனா அரசு அதிருப்தியில் இருந்து வருகிறது.
கிலியில் சீனா
இந்நிலையில் ஜனநாயகம் கோரி லட்சக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் ஒன்று திரண்டிருப்பது சீனாவை கிலி கொள்ள வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.