சித்ரவதையை நியாயப்படுத்திய ஜார்ஜ் புஷ்ஷின் முகத்திரையை கிழித்த செனட் அறிக்கை!!
வாஷிங்டன்: தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றப் போகிறோம் என்று அறிவித்துவிட்டு ஈவிரக்கமற்ற மிருகத்தனமான சித்ரவதைகளுக்கு ஆதரவளித்த அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்-ன் முகத்திரையை செனட் புலனாய்வுக் குழு அறிக்கை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை அல்கொய்தா இயக்கத்தினர் விமானத் தாக்குதல் மூலம் தகர்த்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்களை கைது செய்த அமெரிக்காவின் உளவுத் துறையான சி.ஐ.ஏ. அவர்களை கியூபாவின் குவாண்டனாமோ ரகசிய சிறைகளில் அடைத்தது.
அங்கு தீவிரவாத தாக்குதல் பற்றிய தாக்குதல்களைப் பெறுகிறோம் என்ற பெயரில் மனிதகுலம் வெட்கித் தலைகுனிய வைக்கும் வகையிலான மிருகத்தனமான சித்ரவதை முறைகளைக் சிஐஏ கையாண்டது.
என்ன மாதிரியான சித்ரவதைகள்?
இது குறித்து விசாரித்த செனட் புலனாய்வு அறிக்கை அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிடப்பட்டது. அதில் சங்கிலியால் கட்டி வைத்து தூங்க விடாமல் துன்புறுத்துவது, நாய்களைக் குரைக்கவிட்டு சித்ரவதை செய்வது, கடும் குளிரில் நிர்வாணமாக நிற்க வைப்பது என மிக மோசமான விசாரணை முறைகளை சிஐஏ கையாண்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
புஷ்ஷிடம் மறைத்த சிஐஏ
மேலும் அந்த அறிக்கையில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் 2002ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை இந்த சித்ரவதை முறைகளைப் பற்றியோ அவர்களிடம் என்ன மாதிரியான தகவல்கள் கிடைத்தது என்பது குறித்தோ சிஐஏ தெரிவிக்காமலேயே மறைத்து வந்தது.
எல்லாமே பொய்...
அதன் பின்னர் ஜார்ஜ் புஷ்-டம், சில சட்ட ரீதியான விசாரணை முறைகளைக் குறிப்பிட்டு இதன் மூலம் தீவிரவாதிகளின் சதிகள் பற்றிய விவரங்களைப் பெற்றோம் என்றும் சிஐஏ பொய்யான தகவலைக் கூறியிருந்தது என்றும் அம்பலப்படுத்தியுள்ளது.
அன்று புஷ் பேசியது என்ன?
அத்துடன் குவாண்டனாமோ சிறை விசாரணை குறித்து 2006ஆம் ஆண்டு ஜாஜ் புஷ் கூறுகையில், அமெரிக்கா யாரையும் சித்ரவதை செய்யவில்லை. எங்களது விசாரணை முறைகள் மிகவும் பாதுகாப்பானவை. அப்படி செய்வது என்பது எங்கள் நாட்டின் சட்டங்களுக்கும் கண்ணியத்துக்கும் எதிரானது. நான் ஒருபோதும் இதை ஆதரிக்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
வரிக்கு வரி நிராகரிக்கும் அறிக்கை
ஆனால் புஷ்ஷின் இந்த சிஐஏ ஆதரவு பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பொய் என்பதையும் விவரிக்கிறது செனட் அறிக்கை. அதில், காலித் சேக் முகமது என்பவரை தொடர்ச்சியாக தண்ணீரில் மூழ்க வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மஜித் கான் என்பவரின் மலத்துவாரத்தில் பாட்டில்களில் நீரை நிரப்பி திணித்துள்ளனர்; இதனால் மஜித் கான் இருமுறை தன் மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார் என்று விவரிக்கப்பட்டிருக்கிறது.
அனுபவமற்ற சிஐஏ அதிகாரிகள்
மேலும் "விசாரணை முறைகள் சட்டப்படியானவையே" என்ற புஷ்-ன் பேச்சை முற்று முழுதாக மறுக்கும் வகையில், இத்தகைய விசாரணைகளுக்கு போதிய அனுபவம் எதுவுமே இல்லாத ஜூனியர்களைத்தான் சிஐஏ பயன்படுத்தியது என்கிறது செனட் அறிக்கை.
நீதிமன்றத்திலும் பொய் சொன்ன சிஐஏ
இதேபோல் விசாரணை முறைகள் அனைத்தும் நீதித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் என்றும் புஷ் கூறியிருந்தார். ஆனால் செனட் அறிக்கையோ, நீதித்துறையிடம் சிஐஏ பொய்யான தகவல்களை மட்டுமே தெரிவித்திருக்கிறது. மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும் கூட தொடர்ந்து கொடூரமாக சித்ரவதை செய்திருக்கின்றனர்.. நிர்வாணமாக சங்கிலியால் கட்டிப் போடுவது, 59 முதல் 80 பாரன்ஹீட் வரையிலான வெப்ப நிலை உள்ள அறைகளில் அடைப்பது; பல மணிநேரம் குனிந்தே இருப்பது போல் கட்டிப் போடுவது என சித்ரவதைகளை செய்துள்ளதை விவரமாக தெரிவிக்கிறது.
பெற்ற தகவல்களும் பொய்..
தீவிரவாதிகளிடம் இருந்து அதிமுக்கியமான தகவல்களை பெற்றிருப்பதாக புஷ் தெரிவித்ததையும் செனட் அறிக்கை நிராகரித்துள்ளது. ஏனெனில் சித்ரவதையின் போது பலரும் பொய்யான தகவல்களையே தெரிவித்திருக்கின்றனர் என தமது விசாரணையில் தெரியவந்திருப்பதை தனது அறிக்கையில் அது சுட்டிக்காட்டியுள்ளது.
சிஐஏவுக்கு முன்பே தெரியும்
அத்துடன் அபு சுபயாத் என்பவர், காலித் சேக் முகமதுதான் இரட்டை கோபுர தாக்குதலின் முக்கிய மூளை என்று கூறியதாக சிஐஏ கூறுகிறது... உண்மையில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பே காலித்தின் முக்கிய பங்கு என்ன என்பதை சிஐஏவுக்கு தெரிந்திருந்தது என்றும் செனட் அறிக்கை கூறுகிறது.
அப்படியே கொட்டி யசுயாத்
அபு சுயாத் என்பவர் விசாரணையின் போது எந்த ஒரு தகவலையும் தரவில்லை..என்பதால் சிஐஏ 'விசாரிக்கும் வகையில் விசாரித்தது' என்ற புஷ்ஷின் கருத்தை மறுத்துள்ள செனட் அறிக்கை, இந்த கொடூர சித்ரவதைகளுக்கு முன்னரே சிஐஏ நடத்திய விசாரணையிலேயே அல்கொய்தா குறித்த ஏராளமான தகவல்களை சுயாத் கொட்டிவிட்டார் என்றும் அம்பலப்படுத்தியுள்ளது.