ஆப்கனில் அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்பு: 49 பேர் பலி; 88 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து மூன்று முறை நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 49 பேர் பலியாகினர். 88 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் கந்தகார் நகரில் அடுத்தடுத்து மூன்று முறை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். 88 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் நகரில் கவர்னர் வீட்டருகில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் ஜூமா முகமது அப்துல்லா அல் கபி உள்ளிட்டவர்கள் கவர்னர் வீட்டிற்கு வந்தபோது குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 11 பேர் பலியானதாகவும், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றம் அருகே என்.டி.எஸ் அமைப்பின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினிபஸ் மீது தீவிரவாதி ஒருவன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இதில் என்.டி.எஸ் ஊழியர்கள் சென்ற மினிபஸ் சின்னாபின்னமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் மற்றொரு தற்கொலைப்படை தீவிரவாதி வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்கச் செய்தான். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரட்டைத் தாக்குதலில் நாடாளுமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 38 பேர் பலியானதாகவும், 72 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ஆப்கானிஸ்தானில் நடந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 88 பேர் படுகாயம் அடைந்தனர்.
பிரதமர் மோடி கண்டனம்:
ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே தலிபான்கள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு துணை நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications