ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க மாத்தி யோசிக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை சமாளிக்க அன்பார் மாகாணத்தில் புதிய ராணுவ தளத்தை அமைக்க ஒபாமா அரசு திட்டமிட்டுள்ளது.
ஈராக்கில் உள்ள அன்பார் மாகாணத்தில் இருக்கும் ரமதி நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அண்மையில் கைப்பற்றினர். இந்நிலையில் அன்பார் மாகாணத்தில் புதிய ராணுவ தளத்தை அமைக்க ஒபாமா அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் 400 வீரர்களை அனுப்பி வைத்து ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்து ரமதி நகரை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ரமதி தவிர தீவிரவாதிகள் கடந்த ஆண்டு கைப்பற்றிய மொசுல் நகரை மீட்கவும் அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு இன்னும் வெள்ளை மாளிகை ஒப்புதல் அளிக்கவில்லை.
பயிற்சி இடம்
ஹப்பனியா நகர் அருகே உள்ள அல் தக்கதும் என்கிற ஈராக் ராணுவ தளத்தை பயன்படுத்தி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
ஈராக்
ஈராக்கில் தற்போது 3,000 அமெரிக்க வீரர்கள், அறிவுரையாளர்கள் உள்ளனர். அவர்கள் ஈராக் ராணுவத்திற்கு பயிற்சி அளித்துள்ளனர். பயிற்சியை மேம்படுத்த கூடுதல் வீரர்களை அனுப்பி வைக்க உள்ளது அமெரிக்கா.
மொசுல்
மொசுல் நகரை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்க விரும்புகிறது அமெரிக்கா. ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான மொசுலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீவிரவாதிகள் கைப்பற்றினர். கடந்த ஜூலையில் மொசுல் நகரில் இருந்து தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி உரையாற்றினார்.
அன்பார்
அமெரிக்கா புதிய ராணுவ தளத்தை அமைக்க விரும்பும் அன்பார் மாகாணத்தில் சன்னி முஸ்லீம்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அன்பாரின் தலைநகரான ரமதி பாக்தாத் அருகே உள்ளது.
திக்ரித்
தீவிரவாதிகள் கைப்பற்றிய திக்ரித் நகரை அமெரிக்கா உதவியுடன் ஈராக் ராணுவம் மீட்டது. ஆனால் அந்நகரில் உள்ள கட்டிடங்களை தீவிரவாதிகள் குண்டு வைத்தது தகர்த்துவிட்டதால் மக்கள் பலர் அந்நகருக்கு திரும்பி வரவில்லை.
படைகள்
ரமதி நகரை மீட்க வேண்டும் எனில் அன்பாரில் உள்ள பயிற்சி பெற்ற ஈராக் பழங்குடியினத்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500ல் இருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட வேண்டும். ரமதியை மீட்க ஈராக் ராணுவத்தில் 3 ஆயிரம் பேரை புதிதாக சேர்க்க உள்ளனர்.
இங்கிலாந்து
ஈராக் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க அமெரிக்கா தவிர்த்து இங்கிலாந்தும் கூடுதல் படைகளை அனுப்பி வைக்க உள்ளது. 125 கூடுதல் படைகளை ஈராக்கிற்கு அனுப்பி வைப்பதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார். ஈராக் போலீசாருக்கு இத்தாலி பயிற்சி அளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.