6 ஆண்டுகளில் முதன்முறையாக பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா-ஈரான்
நியூயார்க்: 6 ஆண்டுகளுக்குப் பின்னர் ஈரானும் அமெரிக்காவும் நேற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
1979 ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அணுசக்தி தயாரிக்க ஈரான் முயற்சித்ததை இந்த நாடுகள் கடுமையாக எதிர்த்தன.
நிலைமையை மாற்றிய ருஹானி
அண்மையில் ஈரானின் புதிய அதிபராக ஹசன் ருஹானி பதவியேற்ற பின்னர் நிலைமை மெல்ல மெல்ல மாறியது.
பிரான்ஸ் அதிபருடன் பேச்சு
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்ட ருஹானி பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவை சந்தித்துப் பேசினார்.
அமெரிக்காவுடன் பேச்சு
இதைத் தொடர்ந்து ஈரான், அமெரிக்கா நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சரிபும், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
6 ஆண்டுகளுக்குப் பின்..
கடந்த ஆறு ஆண்டுகளில் இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள முதல் உயர்நிலை சந்திப்பு இது.
ஆக்கப்பூர்வமான சந்திப்பு
இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், இது ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பு. ஈரானின் நடவடிக்கை தற்போது மாறுபட்டிருந்தது என்றார். இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் அமைச்சர் சரிப், இந்த சந்திப்பு முன்னேற்றம் தரக்கூடியதாக இருந்தது என்றார்.