புயல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா.. 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்.. அதிர்ச்சி ரிப்போர்ட்
ஜெனீவா: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா 70 நாடுகளிலும், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா 31 நாடுகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாகவே மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் லண்டன் நகர் பகுதியில் கொரோனா பரவல் திடீரென்று பல மடங்கு அதிகரித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் புது வகையிலான கொரோனாவை கண்டறிந்தனர்.
பிரிட்டன் வகை கொரோனா
இந்நிலையில், இந்த பிரிட்டன் வகை கொரோனா ஜனவரி 25ஆம் தேதி வரை சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. VOC 202012/01 என்று அழைக்கப்படும் இந்த உருமாறிய கொரோனா, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 10 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா மற்ற வகைகளை விட 70% வேகமாகப் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போரிஸ் ஜான்சன் கருத்து
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த உருமாறிய கொரோனா வகை மற்ற வகைகளை விட ஆபத்தானது என்றார். ஆனால், அவரது இந்தக் கருத்தை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. இது ஆரம்பக்கால முடிவுகள் என்றும் இவை உண்மையில் அதிக தீவிரமானதா என்பதை உறுதி செய்ய மேலும் ஆய்வுகள் தேவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க வகை கொரோனா
இதேபோல தென்னாப்பிரிக்காவிலும் கடந்த டிசம்பர் மாதம் புதிய உருமாறிய கொரோனா வகை உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த தென்னாப்பிரிக்க வகை கொரோனா தற்போது வரை 31 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எட்டு நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும், பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை தற்போது வரை எட்டு நாடுகளுக்குப் பரவியுள்ளது.
தடுப்பூசி பலன் அளிக்குமா
இதில் தென்னாப்பிரிக்க வகை கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி முழு பலனை அளிக்காமல் போகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். இது உண்மையாக இருக்கலாம் என்றும் இருப்பினும் இதை உறுதி செய்யக் கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல இந்த தென்னாப்பிரிக்க கொரோனா மற்ற வகைகளை விட வேகமாகப் பரவாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மாடர்னா தடுப்பூசி தென்னாப்பிரிக்க கொரோனாவுக்கு எதிராக முழு பலன் அளிப்பதில்லை என்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.