ருவாண்டா இனப்படுகொலையைத் தடுக்காத ஐநாவின் செயல்பாடு வெட்கக்கேடானது: பான் கீ மூன்
கிஹாலி: சுமார் 8 லட்சம் மக்கள் பலியான ருவாண்டா இனப்படுகொலையை தடுக்க தவறிய ஐநாவின் செயல் வெட்ககேடானது என வருத்தம் தெரிவித்துள்ளார் தற்போதைய ஐ.நா தலைமைச் செயலரான பான் கீ மூன்.
கடந்த 1994ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த இனக்கலவரத்தில் சுமார் எட்டு லட்சம் பேர் கொல்லபட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் துத்ஸி இனத்தவர்கள் ஆவர். இந்த கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஹூட்டு இனத்தார்.
இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீதான சட்ட நடவடிக்கையாக சுமார் இருபது லட்சம் பேருக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றங்களிலும், கொலைவெறிக் கும்பல்களின் தலைவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் மீது அண்டையிலுள்ள தான்ஸானியாவிலும் வழக்கு விசாரணை நடந்துள்ளது.
இந்நிலையில் ருவாண்டா இனப்படுகொலையின் 20-வது ஆண்டு நிறைவையொட்டி, அந்நாட்டு அரசு ஒருவார கால துக்கதினத்தை கடைபிடிக்கிறது. அதன்படி, நேற்று நடந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் போல் ககாமே மற்றும் ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பான் கீ முன், ‘இந்தப் படுகொலைகளைத் தடுப்பதற்குத் தவறிய ஐ.நாவின் மீது இன்னும் வெட்கக்கேடு ஒட்டிக் கொண்டிருக்கிறது' என வேதனைத் தெரிவித்தார்.