பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற வலியுறுத்தும் தீர்மானம்- ஐ.நா. நிராகரிப்பு!
நியூயார்க்: பாலஸ்தீனத்தில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது.
பாலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை தற்போது பார்வையாளர் அந்தஸ்து மட்டும் வழங்கியுள்ளது. இதனால் பாலஸ்தீனத்தின் சார்பில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜோர்டான் நாடு, ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலியத் துருப்புகளை 2 ஆண்டுகளுக்குள் விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை தாக்கல் செய்தது.
அதாவது 2017ஆம் ஆண்டுக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என ஜோர்டான் தீர்மானம் கொண்டுவந்தது.
மேலும் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே அமைதிப் பேச்சுகளை நடத்தவும் வலியுறுத்திய தீர்மானமானது அரபு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான தொடர்ச்சியான ஆலோசனைகளுக்குப் பின்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பாலஸ்தீனம் ஒரு தனிநாடாகவும் ஐ.நா.வின் முழுமையான உறுப்பு நாடாகவும் இடம்பெற வாய்ப்பு உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
பொதுவாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 24 மணிநேரத்துக்கு பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்படும் அல்லது ஒத்தியும் வைக்கப்படும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இப்படி தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்புக்கே வராமலே பல கிடப்பிலும் கிடக்கின்றன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவை நிரந்தர உறுப்பினர் நாடுகள். எஞ்சிய உறுப்பினர் அல்லாத 10 நாடுகளும் சுழற்சி முறையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற 9 நாடுகளின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாலஸ்தீனம்-இஸ்ரேல் தொடர்பான தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் 8 நாடுகள்தான் இத்தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் ஆதரித்தன. 2 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இத்தீர்மானத்தை நிராகரிப்பதாக ஐ.நா. பாதுகாப்பு சபை அறிவித்தது.
இதன் மூலம் முழுமையான சுதந்திர நாடாக பாலஸ்தீனம் உருவாவது நிறைவேறாமல் போயுள்ளது.