கட்டண பாக்கி: பாகிஸ்தான் பிரதமர் வீடு, நாடாளுமன்றத்தில் கேஸ் இணைப்பு துண்டிப்பு
லாகூர்: மின்சாரம் மற்றும் எரிவாயு பில் கட்டாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் அறிவித்த சில நாட்களிலேயே கட்டணம் கட்டாததால் அவர் வீட்டுக்கு எரிவாயு வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணம் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷரீப் கடந்த 23ம் தேதி உத்தரவிட்டார். அவர் போட்ட உத்தரவால் அவருக்கே பாதிப்பு ஏற்படும் என்று அவர் நினைக்கவில்லை.
இஸ்லாமாபாத்தில் உள்ள நவாஸ் ஷரீஃபின் அதிகாரப்பூர்வ வீட்டில் ரூ.4.7 மில்லியன் அளவுக்கு எரிவாயு கட்டண பாக்கி இருந்ததால் எரிவாயு இணைப்பை சூய் நார்தர்ன் கேஸ் லைன்ஸ் லிமிடெட் துண்டித்தது.
பிரதமர் வீடு தவிர நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜின்னா கன்வென்ஷன் சென்டர் மற்றும் ஷரியத் நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் கட்டணம் செலுத்தாதால் எரிவாயு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.