சீனாவுக்கு எதிரான ஹாங்காங் மாணவர் போராட்டம் உச்சகட்டம்- பேச்சுவார்த்தை நடத்த அரசு ஒப்புதல்!
ஹாங்காங்: நிர்வாகச் சுதந்திரம் கோரி சீனா அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் மாணவர் அமைப்பினர் மற்றும் பொது மக்கள் நடத்தும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாணவர் அமைப்பினருடன் ஹாங்காங் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. இதனிடையே, போராட்டக்காரர்களுக்கும் அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
பிரிட்டன் காலனியாதிக்கத்திலிருந்த ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கடந்த 1997-ம் ஆண்டு வந்தது. ஹாங்காங் நகரம் தலைமை நிர்வாக அதிகாரியின் ஆட்சியதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. ஹாங்காங்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல ஆண்டுகளாகவே மக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும் கடந்த சில மாதங்களாக இப்போராட்டம் வலுப்பெற்றுள்ளது.
தேர்தலுக்கு சீனா அரசு ஒப்புக் கொண்டாலும், தேர்தலில் போட்டியிடுபவர்களை சீனா அரசு நியமிக்கும் குழுதான் தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சீனா அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, சாலைகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
மோதல் வெடித்தது..
இதனிடையே, நேற்று போராட்டக்காரர்களுக்கும் சீனா அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது. ராஜினாமா செய்ய மறுத்துள்ள தலைமை நிர்வாக அதிகாரி, லியுங் சுன் யிங், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரதான மாணவர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தலைமை நிர்வாகச் செயலாளரை நியமித்துள்ளார்.