மேல கையை வச்சா.. உருத் தெரியாம அழிச்சிருவோம்.. வட கொரியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
வாஷிங்டன்: அமெரிக்கா மீது வட கொரியா தாக்குதல் நடத்தினால் அடையாளமே தெரியாத அளவுக்கு மிகக் கடுமையான பதிலடியை நாங்கள் பரிசாகத் தருவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரியாவை எச்சரித்துள்ளார்.
நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு தாக்குதல் பலமாக இருக்கும் என்பதை வட கொரியாவும் அதன் தலைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா - வட கொரியா இடையிலான சமீபத்திய மோதலில் இந்த எச்சரிக்கைப் பேச்சுக்கள் புதிய பரபரப்பைக் கூட்டியுள்ளன.
தங்களது ராணுவம் முழுத் தயார் நிலையில் உள்ளதாகவும், வட கொரியா தங்கள் நிலப்பரப்பில் தாக்குதல் நடத்தினால் உடனடியாக அது பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
|
டிவிட்டரில் மிரட்டல்
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டிவீட்டில், ராணுவம் தற்போது முழு அளவில் தயாராக உள்ளது. ஆயுதங்கள் லோட் செய்யப்பட்ட நிலையில் தயாராக உள்ளன. கிம் ஜாங் உன் புத்திசாலித்தனமாக செயல்படுவது அவருக்கு நல்லது.
|
திரும்பிப் பார்க்காமல் போய் விடு
எங்களது பாதையில் கிம் குறுக்கிடாமல் இருப்பார் என நம்புகிறேன். அப்படி இல்லாவிட்டால் வரலாறு காணாத நஷ்டத்தை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மிரட்டியுள்ளார் டிரம்ப்.
விடாமல் மிரட்டும் கிம்
வட கொரியா தொடர்ந்து ஏவுகனை சோதனைகளை நடத்தி வருகிறது. யார் என்ன சொன்னாலும் அது கேட்பதில்லை. குறிப்பாக அமெரிக்காவை மிரட்டும் வகையில் பேச ஆரம்பித்துள்ளார் கிம்.
குவாம் தீவுக்குக் குறி
அமெரிக்காவின் குவாம் தீவைக் குறி வைத்து பேசி வருகிறார் கிம். குவாம் தீவுகளைத் தாக்குவோம், மொத்த அமெரிக்காவும் எங்களது விரலுக்குக் கீழ்தான் என்றும் கூறி வருகிறார் கிம். இதனால்தான் டிரம்ப் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.