போன வருஷம் மட்டும் 50 கோடி கோன் ஐஸ்களை கபளீகரம் செய்த இங்கிலாந்து மக்கள்!
லண்டன்: இதென்ன வாயா வாய்க்காலா, என்ன வாய்டா உன் வாய் என்று ஒரு படத்தில் செந்திலைப் பார்த்து நடிகர் கவுண்டமணி கேட்பார்.
இங்கிலாந்துக்காரர்களைப் பார்த்து அப்படித்தான் கேட்க வேண்டியுள்ளது. கடந்த வருடம் அவர்கள் கிட்டத்தட்ட 50 கோடி கோன் ஐஸ்கிரீம்களைச் சாப்பிட்டுள்ளனராம்.
ஐஸ்கிரீம் என்றால் உருகாத உள்ளம் இல்லை, ஜொள்ளு விடாத வாய்களும் இல்லை. இங்கிலாந்துக்காரர்கள் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்க முடியுமா என்ன. கடந்த வருடம் உலகிலேயே அதிக அளவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டவர்கள் இவர்கள்தானாம்.
தின்று தீர்த்து இங்கிலாந்துவாசிகள்:
கடந்த வருடம் மட்டும் சுமார் 50 கோடி ஐஸ்கிரீம்களை இவர்கள் சாப்பிட்டுத் தீர்த்துள்ளனராம். கடந்த காலத்தில் கோடை காலத்தில்தான் அதிக அளவில் ஐஸ்கிரீம் அங்கு விற்பனையாகியுள்ளது.
என்ன ஏழரை கோன் ஐஸ் ஆ?:
இந்த கணக்கைப் பார்த்தால் சராசரியாக அங்குள்ள ஒவ்வொருவரும் ஏழரை கோன் ஐஸ்கிரீமை சாப்பிட்டுள்ளனர்.
22 சதவீதம் அதிகம்:
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் 7243 மில்லியன் பவுண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டதாம். இது 2008ம் ஆண்டு விட 22 சதவீதம் அதிகமாகும்.
வண்டி, வண்டியாக ஐஸ்கீரிம்:
கடந்த வருடம் கோடை காலம் மிக் கடுமையாக இருந்ததால்தான் ஐஸ்கிரீம் தயாரிப்பும், நுகர்வோர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் இரு்நதுள்ளதாம்.
சுற்றுலாதான் காரணமாம்:
மேலும் கடந்த வருடம் இங்கிலாந்தில் சுற்றுலாவும் அதிகரித்திருந்தது. கோடை கால முகாம்களுக்குச் செல்வோரும் அதிகரித்திருந்தனர். இதுவும் விற்பனை கூடக் காரணமாம்.
”அது” கம்மிதானாம்:
அதேசமயம், பீர் விற்பனையும் கடந்த கோடைகாலத்தில் அதிகமாக இருந்ததாம். அதேசமயம் குளிர்கால்தில் இதன் விற்பனை குறைந்துள்ளது. ஆனால் ஐஸ்கிரீம் விற்பனை மட்டும் குறையவில்லையாம்.